மோடியைத் தொடர்ந்து பாஜக தேசிய செயற்குழுக் கூட்டத்தை புறக்கணிப்பதாக எதியூரப்பாவும் அறிவிப்பு
கர்நாடகம் மற்றும் குஜராத் மாநிலங்களில் ஆளும் பாரதிய ஜனதா கட்சியில் உட்கட்சிப் பூசல் உச்சகட்டத்தில் இருந்து வருகிறது. கர்நாடகத்தில் முன்னாள் முதல்வர் எதியூரப்பா போர்க்கொடி தூக்கி வருகிறார்.
கர்நாடக பாஜக பிரச்சனைகளுக்கு பொதுச்செயலாளர் அனந்த்குமார்தான் காரணம் என்றும் அவர் மீது கட்சித் தலைமை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் எதியூரப்பா வலியுறுத்தியுள்ளார். மேலும் குஜராத் மாநிலம் போற்றுகிற தலைவரான முதல்வர் நரேந்திர மோடிக்கும் கூட கட்சியில் உரிய முக்கியத்துவம் கொடுக்கப்படவில்லை என்றும் எதியூரப்பா வருத்தம் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் மும்பையில் மே 23-ந் தேதி தொடங்கும் கட்சியின் தேசிய செயற்குழுக் கூட்டத்தில் பங்கேற்கப் போவதில்லை என்று நரேந்திர மோடி முடிவெடுத்திருக்கிறார். அவரைப் போலவே தாமும் கட்சியின் தேசிய செயற்குழுக் கூட்டத்தில் பங்கேற்கப் போவதில்லை என்றும் எதியூரப்பா அறிவித்திருக்கிறார்.
குஜராத்தைப் பொறுத்தவரையில் மோடிக்கு எதிராக முன்னாள் முதல்வர் கேசுபாய் படேலை கத்காரி ஆதரிப்பதாகக் கூறப்படுகிறது. இதுவரை கட்சியின் தேசிய செயற்குழுக் கூட்டங்களைப் புறக்கணித்து வந்த கேசுபாய்க்கு இம்முறை அழைப்பு அனுப்பப்பட்டிருப்பதை மோடியின் ஆதரவாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
இந்த சூழ்நிலையில் மோடியைப் போலவே தமக்கும் அநீதி இழைக்கப்படுவதாக குரல் கொடுத்திருப்பதன் மூலம் தமக்கான ஆதரவு முகாமை பாஜகவுக்குள் வலுப்படுத்தவே எதியூரப்பா முயல்வதாகவும் கூறப்படுகிறது.