ஐ.ஐ.டி. நுழைவுத்தேர்வு முடிவுகள்: சென்னை மாணவர் வைஷாக் முதலிடம்!
மத்திய அரசின் கல்வி நிறுவனமான ஐ.ஐ.டி. (இந்தியன் இன்ஸ்டிடிïட் ஆப் டெக்னாலஜி) சென்னை, மும்பை, கவுகாத்தி, கொரக்பூர், ரூர்கே, கான்பூர் உள்பட 15 இடங்களில் உள்ளன. இவற்றில் 7 பழையவை. 8 புதியவை.
இந்த ஐ.ஐ.டி. நிறுவனங்களில் பி.டெக். எம்.டெக். உள்ளிட்ட தொழில்நுட்ப கல்வியை மாணவ-மாணவிகள் படிக்கிறார்கள்.
தரமிக்க இந்த ஐ.ஐ.டி. நிறுவனங்களில் சேர்ந்து படிக்க ஏராளமான மாணவர்கள் போட்டி போடுகிறார்கள். அதற்காக 4 அல்லது 5 வருடங்கள் பயிற்சி மையங்களில் சேர்ந்து படிப்பவர்கள் உண்டு.
ஐ.ஐ.டி. நிறுவனங்களில் சேர்ந்து பி.டெக். படிக்க அகில இந்திய அளவில் நுழைவுத்தேர்வு மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை சார்பில் நடத்தப்படுகிறது. அதன்படி இந்த வருட மாணவர் சேர்க்கைக்கான நுழைவுத்தேர்வு கடந்த ஏப்ரல் மாதம் 8-ந் தேதி நடத்தப்பட்டது. 10 ஆயிரம் இடங்களுக்கு 5 லட்சத்து 20 ஆயிரம் மாணவ-மாணவிகள் தேர்வு எழுதினார்கள்.
ஐ.ஐ.டி. நுழைவுத்தேர்வின் முடிவு நேற்று காலை வெளியானது.
அகில இந்திய அளவில் முதல் இடத்தை டெல்லியைச் சேர்ந்த அர்பித் அகர்வால் பிடித்தார். 2-வது இடத்தை சண்டிகாரைச் சேர்ந்த பிஜாய் சிங் கோச்சார் பெற்றார். 3-வது இடத்தை பிலாய் நிஷார் பிடித்துள்ளார்.
தமிழ்நாட்டில் வைஷாக் முதலிடம்
தமிழ்நாடு அளவில் முதல் மாணவராக வைஷாக் என்ற மாணவர் வந்துள்ளார். அவர் அகில இந்திய அளவில் 36-வது இடத்தை பிடித்துள்ளார். ரோஷன் என்ற மாணவர் 55-வது இடத்தையும், 73-வது இடத்தை மாணவர் அரவிந்தும், 78-வது இடத்தை சித்தார்த் என்ற மாணவரும், 80-வது இடத்தை மாணவர் நன்னன் என்பவரும் பெற்றுள்ளனர்.
இவர்கள் அனைவரும் சென்னையைச் சேர்ந்தவர்கள். இந்த 5 மாணவர்களும் சென்னையில் உள்ள பிட்ஜு பயிற்சி மையத்தில் படித்தவர்கள். இந்த குழுமத்தில் பயிற்சி பெற்றவர்கள்தான் அகில இந்திய அளவில் முதல் 3 இடங்களை பெற்றுள்ளனர். 100 ரேங்க்குக்குள் தமிழ்நாட்டில் 6 பேர் வந்துள்ளனர். அவர்களில் 5 பேர் எங்கள் நிறுவனத்தில் படித்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
செல்போன் துறையில் புதிதாக கண்டுபிடிப்பேன்
மாநில அளவில் முதல் இடம் மாணவர் வைஷாக் சென்னை அம்பத்தூர் வெங்கடேஷ் நகரில் வசித்து வருகிறார். அவரது தந்தை ரவீந்திரகுமார். தாயார் ஷோபா. இவர்கள் இருவரும் என்ஜினீயர்கள்.
முதலிடம் பெற்றது குறித்து வைஷாக் கூறுகையில், "நான் பிறந்தது கேரளாவில். ஆனால் படித்தது எல்லாம் சென்னையில் தான். 10-வது வகுப்பு வரை முகப்பேரில் உள்ள வேலம்மாள் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப்பள்ளியில் படித்தேன். மெட்ரிகுலேஷன் முறையில் படித்த நான் 11 மற்றும் 12-வது வகுப்புகளை சி.பி.எஸ்.இ. முறையில் சேத்துப்பட்டில் உள்ள மகரிஷி வித்யா மந்திர் பள்ளியில் படித்தேன்.
கடந்த 2 வருடங்களாக ஐ.ஐ.டி. நுழைவுத்தேர்வுக்கு பயிற்சி பெற்றேன். மும்பை ஐ.ஐ.டி.யில் பி.டெக். எலெக்டிரிக்கல் அல்லது கம்ப்யூட்டர் சயின்ஸ் பாடப்பிரிவை எடுத்து படிப்பேன். பின்னர் செல்போன் மற்றும் கம்ப்யூட்டர் துறையில் புதிதாக கண்டுபிடித்து சாதிப்பதே எனது லட்சியம்.
சி.பி.எஸ்.இ. சேர்ந்து படித்தது ஐ.ஐ.டி. நுழைவுத்தேர்வுக்கு ஒரு வரப்பிரசாதமாக இருந்தது. அதே நேரத்தில் மெட்ரிகுலேஷன் முறையில் படித்ததும் எனக்கு கை கொடுத்தது. சி.பி.எஸ்.இ. முறையில் முதலிலேயே படித்திருந்தால் இன்னும் ரேங்க் முந்தியிருப்பேன். ஐ.ஐ.டி. நுழைவுத்தேர்வில் அடுத்த வருடம் சில மாற்றங்கள் வர உள்ளதாக கூறப்படுகிறது. அந்த மாற்றம் வந்தால் மாநில பாடத்திட்டத்தில் படிப்பவர்கள் பலர் ஐ.ஐ.டி. நுழைவுத்தேர்வில் வெற்றி பெறுவார்கள்," என்றார்.
ஐ.ஐ.டி. தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு கலந்தாய்வு அடிப்படையில் ஐ.ஐ.டி.யில் சேர இடம் ஒதுக்கப்படும். அந்த கலந்தாய்வு ஜுன் மாதம் நடைபெற உள்ளது.