கருணாநிதியுடன் அலெக்ஸ் பால் மேனன் குடும்பத்துடன் சந்திப்பு
3 நாட்களுக்கு முன் முதல்வர் ஜெயலலிதாவை கோட்டையில் சந்தித்து அவர் நன்றி தெரிவித்தார்.
இந்த நிலையில் கோபாலபுரம் இல்லத்தில் கருணாநிதியை அலெக்ஸ் பால்மேனன் சந்தித்தார். அவருடன் மனைவி ஆஷா உள்பட அவரது குடும்பத்தினர் அனைவரும் வந்திருந்தனர். அப்போது கருணாநிதியின் மனைவி தயாளு அம்மாளும் உடனிருந்தார்.
சந்திப்புக்குப் பின் நிருபர்களிடம் பேசிய மேனன், என்னை விடுவிக்க வேண்டும் என்று மத்திய அரசை வலியுறுத்தியதற்காக திமுக தலைவர் கருணாநிதியைச் சந்தித்து நன்றி தெரிவித்தேன். என்னுடைய உடல்நலம் தொடர்பாக கருணாநிதி விசாரித்தார். நான் மீண்டும் சுக்மா மாவட்டத்திலேயே ஆட்சியராகப் பணியாற்ற விரும்புகிறேன் என்றார்
மேனன் கடந்த ஏப்ரல் 21ம் தேதி மாவோயிஸ்டுகளால் கடத்தப்பட்டு மே 3ம் தேதி விடுவிக்கப்பட்டது நினைவுகூறத்தக்கது.
சங்மாவுக்கு ஆதரவா?-இப்போது கருத்து கூற மாட்டேன்..கருணாநிதி:
இந் நிலையில் ஜனாதிபதி தேர்தலில் பி.ஏ.சங்மாவை முதல்வர் ஜெயலலிதா ஆதரித்துள்ள நிலையில் இது குறித்து கருணாநிதியிடம் கேட்டபோது, இது பற்றி இப்போது நான் கருத்து கூற மாட்டேன் என்றார்.