சோதனை முடிந்தும் இன்னும் இயக்கப்படாத நெல்லை- தென்காசி ரயில்சேவை
திருநெல்வேலி- தென்காசி இடையேயான பாதை அகலப் பாதையாக மாற்றும் பணி கடந்த 2009-ம் ஆண்டு ஜூன் 1-ந் தேதி தொடங்கியது. மலையில் 72 கிலோ மீட்டர் தூரத்திற்கு ரூ220 கோடியில் அகல ரயில் பாதை பணிகள் முடிக்கப்பட்டன. 13 பெரிய மேம்பாலங்கள், 100க்கும் மேற்பட்ட சிறிய பாலங்கள் கட்டி முடிக்கப்பட்டுள்ளன. கடந்த ஆண்டு இறுதியில் இந்தப் பணிகள் முடிவடைந்தன.
மதுரை கோட்ட மேலாளர் கோயல் கடந்த பிப்ரவரி 17ந் தேதி நெல்லை-தென்காசி வழிததடத்தில் சிறப்பு ரயில் இயக்கி சோதனை ஓட்டம் நடத்தினார். அப்போது ரயிலின் வேகம், தண்டவளத்தின் உறுதிதன்மை ஆகியவை ஆய்வு செய்யப்பட்டது. பின்னர் கடந்த மார்ச் மாதம் 29ந் தேதி ரயில்நே பாதுகாப்பு ஆணையாளர் மிட்டல் அதிவேக ரயில் சோதனை நடத்தினார். இதையடுத்து நெல்லை-தென்காசி அகல ரயில் பாதையில் ரயில் இயக்க பாதுகாப்பு ஆணையர் பரிந்துரைத்தார்.
சோதனை முடிந்து 2 மாதங்கள் ஆகியும் நெல்லை-தென்காசி அகல ரயில் பாதையில் இதுவரை ரயில் இயக்கப்படவில்லை. நெல்லை ரயில்நிலையத்தில் மதுரை கோட்ட கூடுதல் ரயில்வே மேலாளர் அஜித்குமார் ஆய்வு நடத்தினார். பின்னர் அவர் கூறுகையில், நெல்லை, தென்காசி அகல ரயில் பாதை பணிகள் அனைத்தும் முடிந்து விட்டன. இந்த வழித்தடத்தில் 70கிமீ வேகத்தில் ரயில் இயக்கலாம் என ரயில்வே பாதுகாப்பு ஆணையர் பரிந்துரை செய்துள்ளார். நெல்லை-தென்காசி இடையே ரயிலை இயக்க அதிகாரிகள் தயாராக உள்ளனர். ரயில்வே வாரியம் அனுமதி கிடைத்தவுடன் நெல்லை-தென்காசி இடையே அகல ரயில் இயக்கப்படும் என்றார். அனேகமாக ஜூலை மாதத்துக்கு முன்னதாக இந்த ரயில்சேவை இயக்கப்படக் கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.