கூட்டத்தை புறக்கணிக்கும் மோடி, எதியூரப்பா-சமாதானப்படுத்த பாஜக தீவிரம்
டெல்லி: கர்நாடகம் மற்றும் குஜராத் மாநில ஆளும் பாரதிய ஜனதா கட்சியில் ஏற்பட்டுள்ள பிளவானது அக்கட்சியின் மேலிடத்தை கடும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.
குஜராத்தில் கேசுபாய் படேலை பாஜக தலைவர் கத்காரி முன்னிறுத்துவதை அம்மாநில முதல்வர் மோடி ரசிக்கவில்லை. இதனால் அவர் மும்பையில் வரும் 23-ந் தேதி நடைபெற உள்ள பாஜகவின் தேசிய செயற்குழுவைப் புறக்கணிப்பதாக அறிவித்துள்ளார்.
இதேபோல் கர்நாடகத்தில் தம்மை மீண்டும் முதல்வராக்க வேண்டும் என்று போர்க்கொடி தூக்கிய எதியூரப்பாவையும் பாஜக மேலிடம் கண்டுகொள்ளவில்லை. இதில் கடுப்படைந்த எதியூரப்பாவும் மோடியைப் போலவே தாமும் தேசிய செயற்குழுக் கூட்டத்தில் பங்கேற்கப் போவதில்லை என்று அறிவித்திருந்தார்.
பாஜக ஆளும் மாநிலங்களில் ஏற்பட்டுள்ள கருத்து வேறுபாடுகளால் வெடித்துள்ள மோதலை முடிவுக்குக் கொண்டு வரவும் மோடியையும் எதியூரப்பாவையும் சமாதானப்படுத்தி தேசிய செயற்குழுக் கூட்டத்தில் பங்கேற்க வைக்கவும் அக்கட்சி மேலிடம் தீவிரம்காட்டி வருகிறது.
இருவரையும் சமாதானப்படுத்தும் முயற்சியில் அருண்ஜேட்லி களம் இறக்கப்பட்டுள்ளார். அருண்ஜேட்லியின் சமாதான படலம் சாத்தியமாகுமா? என்பதே பாஜகவினரின் எதிர்பார்ப்பு.