பெட்ரோல் விலையை உடனே உயர்த்த வேண்டும்: பெட்ரோலியத் துறை அமைச்சர்
துர்க்மெனிஸ்தான்-ஆப்கானிஸ்தான்-பாகிஸ்தான் வழியாக இந்தியாவுக்கு குழாய் மூலம் எரிபொருள் கொண்டு வரும் ஒப்பந்த்தில் கையெழுத்திடுவதற்காக மத்திய பெட்ரோலியத் துறை அமைச்சர் ஜெய்பால் ரெட்டி நேற்று அஸ்காபாத் புறப்பட்டு சென்றார்.
அதற்கு முன் அவர் அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில்,
சர்வதேச அளவில் இந்திய ரூபாயின் மதிப்பு மிகவும் குறைந்து கொண்டே போவதால் அதிக விலை கொடுத்து கச்சா எண்ணெய்யை இறக்குமதி செய்ய வேண்டியுள்ளது. எனவே பெட்ரோல் விலையை உடனடியாக உயர்த்த வேண்டும். ஆனால் பெட்ரோல் விலையை உயர்த்தும் முன்பு இது குறித்து அரசியல் கட்சிகளுடன் கலந்தாலோசிக்க வேண்டும்.
அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு ரூ.1 குறைந்தாலும், நம் எண்ணெய் நிறுவனங்களுக்கு ஆண்டு ஒன்றுக்கு ரூ.8,000 கோடி நஷ்டம் ஏற்படுகிறது. நேற்று முன்தினம் இந்திய ரூபாயின் மதிப்பு எப்பொழுதும் இல்லாத அளவுக்கு ரூ.55க குறைந்தது.
இதையெல்லாம் பார்க்கும்போது ஏதாவது செய்ய வேண்டும், ஆனால் எங்கு எப்படி என்று தெரியவில்லை. நான் எதையும் கணிக்கவும் முடியாது. விலை உயர்த்துவதும், உயர்த்தாதும் குறித்து இன்னும் ஒரு முடிவும் எடுக்கப்படவில்லை என்றார். ஆனால் பெட்ரோல் விலை எப்பொழுது உயர்த்தப்படும் என்பதை தெரிவிக்க அவர் மறுத்துவிட்டார்.
கடந்த ஆண்டு ஜூன் மாதம் டீசல், மண்ணெண்ணெய் மற்றும் சமையல் கேஸ் ஆகியவற்றின் விலைகள் உயர்த்தப்பட்டன. மேலும் கடந்த நவம்பர் மாதம் 4ம் தேதி பெட்ரோல் விலை உயர்த்தப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.