அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பில் தொடரும் சரிவு
சர்வதேச சந்தையில் அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு ரூ.55.39 ஆக நேற்று சரிந்தது. இந்நிலையில் இன்று மேலும் 43 காசுகள் வரை சரிவை சந்தித்துள்ளது.
ஐரோப்பிய நாடுகளின் தொடர் நிதிச் சிக்கல்தான் இந்திய ரூபாயின் மதிப்பு சரியக் காரணம் என்று கூறப்படுகிறது. ஆனால் ஆளும் மத்திய அரசின் தவறான பொருளாதார கொள்கைதான் இந்திய ரூபாயின் மதிப்பு சரிவுக்குக் காரணம் என்று பாரதிய ஜனதா கட்சி குற்றம்சாட்டியுள்ளது.
நாட்டின் ரூபாய் மதிப்பு தொடர்ந்தும் சரிவை சந்தித்து வருவதால் பங்குச் சந்தைகளும் கடும் சரிவை எதிர்கொண்டு வருகின்றன. இதனால் அத்தியாவசியப் பொருட்களின் விலையும் உயரக் கூட அபாயம் இருப்பதாக சுட்டிக்காட்டப்படுகிறது. பெட்ரோல், டீசல் விலையும் கடுமையாக உயரக் கூடும் என பொருளாதார வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.
ஆனால் இத்தகைய சவால்கள் இதற்கு முன்பும் ஏற்பட்டிருப்பதால் இதனை சரி செய்ய மத்திய அரசு உரிய நடவடிக்கை எடுக்கும் என்று நிதி அமைச்சர் பிரணாப் முகர்ஜி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.