டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு தொடர்ந்து சரிகிறது.. ரூ.60 என்ற நிலையை எட்டும் அபாயம்!
மும்பை: டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு அடுத்த சில வாரங்களில் ரூ.60 என்ற நிலைக்குச் சரியும் என்று அஞ்சப்படுகிறது.
கடந்த சில மாதங்களுக்கு முன் ஒரு டாலருக்கு 48 என்று இருந்த ரூபாயின் மதிப்பு தொடர்ந்து சரிந்து, சரிந்து நேற்று 56 ரூபாய் என்ற நிலையை அடைந்தது. இதே நிலை தொடர்ந்தால் விரைவிலேயே ஒரு டாலருக்கான இந்திய ரூபாயின் மதிப்பு 60 ரூபாயைத் தொட்டுவிடும் என்கின்றனர் பொருளாதார நிபுணர்கள்.
க்ரீஸ், போர்ச்சுகல், ஸ்பெயின் ஆகிய நாடுகளின் நிதி நிலைமை படு பாதாளத்துக்குப் போனதால்
ஐரோப்பாவில் ஏற்பட்டுள்ள பொருளாதார சிக்கல்களால் யூரோவின் மதிப்பு படுத்துவிட்டது. இதனால் அதற்கு போட்டி கரன்சியான டாலரின் மதிப்பு உலகெங்கும் அதிகரித்து வருகிறது.
ஆனால், இந்தியாவில் தான் டாலரின் மதிப்பு மிக வேகமாக உயர்ந்து வருகிறது. காரணம், இந்தியாவின் பட்ஜெட் பற்றாக்குறை, நடப்புக் கணக்கு பற்றாக்குறை, பணவீக்கம், அன்னிய முதலீடுகள் குறைந்து போனதால் ஏற்பட்ட டாலர் தட்டுப்பாடு, பெட்ரோலியப் பொருட்கள்- உணவு தானியங்கள் மீது தரப்படும் மாபெரும் மானியத்தால் ஏற்பட்ட பட்ஜெட் ஓட்டை, பெட்ரோலிய இறக்குமதிக்காக செலவிடப்படும் பல்லாயிரம் கோடி அன்னிய செலாவணி (டாலர்) என காரணங்களை அடுக்கிக் கொண்டே போகலாம்.
இந்தக் காரணங்களால், மற்ற நாடுகளை விட டாலரின் மதிப்பு இந்தியாவில் தான் மிக வேகமாக அதிகரித்து வருகிறது. டாலர் மதிப்பு கூடுனா கூடிட்டுப் போகுது, அதுனால என்னய்யா என்று கேட்கலாம்.
பாஸ்.. அதுனால் தான் பெட்ரோல் விலையே இந்த அளவுக்கு வரலாறு காணாத அளவுக்கு கூடுச்சு என்று சொன்னால் உங்களுக்கு உண்மை நிலை புரியலாம்.
அதாவது, ஒரு பேரல் கச்சா எண்ணெய்யை இறக்குமதி செய்ய முன்பு 95 டாலர் செலவிட்ட இந்தியா இப்போது, அதற்கு 98 டாலர் செலவிட்டால் என்ன ஆகும்?. இன்னும் தெளிவாக சொல்ல வேண்டுமானால், கச்சா எண்ணெய் விலை அப்படியே தான் உள்ளது. ஆனால், 48 ரூபாய்க்கு ஒரு டாலர் என்று இருந்த நிலை மாறி, 56 ரூபாயைக் கொடுத்தால் தான் ஒரு டாலர் என்ற நிலை உருவாகிவிட்டது.
இதனால் ரூபாயை டாலராக மாற்றி கச்சா எண்ணெய்யை வாங்கப் போகும்போது, அதிகமான ரூபாய் செலவாகிறது. இந்த செலவைத் தான் மத்திய இப்போது பெட்ரோல் விலை உயர்வு என்ற பெயரில் நம் தலையில் கட்டியுள்ளது.
அதே போல எல்லா இறக்குமதியாளர்களுக்கும் இதே நிலை தான். கடந்த மாதம் ஒரு டன் இரும்பு இறக்குமதிக்கு செலவிட்ட தொகையைவிட இந்த மாதம் கிட்டத்தட்ட 20 சதவீதம் அதிகமாக செலவிட வேண்டிய நிலையில் உள்ளன எஃகு உற்பத்தியாளர்கள். இப்படி எல்லா இறக்குமதிகளின் விலையும் டாலரின் மதிப்பு உயர்ந்தாதல் அதிகரித்துவிட்டன.
அதே நேரத்தில் ஜவுளி, சாப்ட்வேர் உள்ளிட்ட இந்திய ஏற்றுமதியாளர்களுக்கு இந்த டாலர் விலை ஏற்றம் குதூகலமான செய்தி தான். இவர்களுக்கு கடந்த மாதம் ஒரு டாலருக்கு கிடைத்த ரூபாயைவிட இந்த மாதம் கிடைக்கும் ரூபாயின் அளவு அதிகமாக இருக்கும்.