பெட்ரோல் விலை உயர்வு தவிர்க்க முடியாதது: ஜெய்பால் ரெட்டி
டெல்லி: பெட்ரோல் விலை உயர்வு தவிர்க்க முடியாத ஒன்று என்று பெட்ரோலியத் துறை அமைச்சர் ஜெய்பால் ரெட்டி கூறினார்.
இந்திய வரலாறு இதுவரை கண்டிராத வகையில் பெட்ரோலிய விலை உயர்வை எதிர்கொண்டிருக்கும் நிலையில் ஐக்கிய முற்போக்குக் கூட்டணியின் தலைவர் சோனியாவை ஜெய்பால் ரெட்டி இன்று சந்தித்து விளக்கம் அளிக்க உள்ளர்.
பெட்ரோலிய விலை உயர்வை எண்ணெய் நிறுவனங்களே தீர்மானித்துக் கொள்ள கடந்த ஆண்டு மத்திய அரசு ஒப்புதல் அளித்திருந்தது. இதைத் தொடர்ந்து நடப்பாண்டில் வரலாறு காணாத விலை உயர்வை எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்திருக்கின்றன. ஆனால் இந்த விலை உயர்வின் போது பெட்ரோலிய அமைச்சர் நாட்டில் இல்லை. அவர் வெளிநாட்டில் பயணம் மேற்கொண்டிருதார்.
இதையடுத்து தமது பயணத்தை ரத்து செய்துவிட்டு நாடு திரும்பிய ஜெய்பால் ரெட்டி இன்று ஐக்கிய முற்போக்குக் கூட்டணியின் தலைவர் சோனியாவை சந்திக்க உள்ளார். இதேபோல் காங்கிரஸ் கட்சிப் பொதுச்செயலாளர் அகமது படேலையும் ஜெய்பால் ரெட்டி சந்தித்து விவாதிக்க உள்ளார்.
இந் நிலையில் நிருபர்களிடம் பேசிய அவர், சர்வதேச காரணங்களால் தான் பெட்ரோல் விலையை உயர்த்த வேண்டிய நிலை ஏற்பட்டது. இதை கட்டுப்படுத்தும் நிலைமையில் நாம் இல்லை. அதே நேரத்தில் இந்த விலை உயர்வு நீண்ட கால அடிப்படையில் நாட்டுக்கு நல்லதாகவே அமையும்.
மாநில அரசுகள் தான் வரியைக் குறைத்து பெட்ரோல் விலையைக் குறைக்க வேண்டும் என்றார்.
இந்நிலையில் டீசல் மற்றும் சமையல் எரிவாயு விலையும் விரைவில் உயரக்கூடிய வாய்ப்பிருப்பதாகக் கூறப்படுகிறது.