தமிழகத்துக்கு மண்ணெண்ணெய் அளவை குறைத்த மத்திய அரசு: ஜெயலலிதா காட்டம்
சென்னை: தமிழ்நாட்டுக்கு மத்திய அரசால் வழங்கப்பட்டு வந்த மண்ணெண்ணெயின் அளவைக் குறைத்தது நியாயமற்ற செயல் என்று தமிழக முதல்வர் ஜெயலலிதா கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக பிரதமர் மன்மோகன்சிங்குக்கு ஜெயலலிதா அனுப்பியுள்ள கடிதத்தில் கூறப்பட்டுள்ளதாவது:
2011 ஏப்ரல், மே மாதங்களில் தமிழகத்துக்கு 52,806 கிலோலிட்டர் மண்ணெண்ணெய் வழங்கப்பட்டு வந்தது. பின்னர் எந்தவித காரணமும் இன்றி அது 44,580 கிலோ லிட்டராக குறைக்கப்பட்டது.
இப்போது 2012 ஏப்ரல்-ஜூன் காலாண்டுக்கான மண்ணெண்ணெய் 39,429 கிலோலிட்டராக குறைக்கப்பட்டுள்ளது. இது ஏழை, எளிய மக்களை மிகவும் பாதிக்கும்.
அதிமுகவுக்கு வாக்களித்தார்கள் என்பதற்காக பொதுவிநியோகத்திட்டத்தின் மூலம் அவர்களுக்கு வழங்கப்படும் மண்ணெண்ணெயின் அளவைக் குறைத்திருப்பது முற்றிலும் நியாயமற்றது, ஏற்றுக்கொள்ள முடியாதது.
ஆகையால் மாதத்துக்கு 65,140 கிலோலிட்டர் மண்ணெண்ணெயை தமிழகத்துக்கு ஒதுக்கீடு செய்ய வேண்டும். அல்லது 2011 ஏப்ரல்-மேயில் ஒதுக்கீடு செய்யப்பட்ட 52,806 கிலோலிட்டரையாவது ஒதுக்க வேண்டும் என்று அந்த கடிதத்தில் ஜெயலலிதா கேட்டுக் கொண்டுள்ளார்.