இலங்கை தமிழரசுக் கட்சித் தலைவராக இரா. சம்பந்தன் மீண்டும் தேர்வு
மட்டக்களப்பு : இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவராக நாடாளுமன்ற உறுப்பினர் இரா. சம்பந்தன் மீண்டும் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
மட்டக்களப்பில் நடைபெற்ற இலங்கை தமிழரசுக் கட்சியின் 14-வது தேசிய மாநாடு மட்டக்களப்பில் நேற்று தொடங்கியது. மாநாட்டையொட்டிய பொதுச்சபைக் கூட்ட்டத்தில் தலைவர் மற்றும் இதர நிர்வாகிகள் தேர்வு நடைபெற்றது. தலைவராக இரா. சம்பந்தன் தேர்வு செய்யப்பட்டார். கட்சியின் ஆண்டறிக்கையை செயலாளர் மாவை சேனாதிராசா தாக்கல் செய்தார்.
இவர்களுடன் 8 மாவட்டங்களுக்கு துணைத் தலைவர்களும், 12 செயற்குழு உறுப்பினர்களும் தேர்வு செய்யப்பட்டனர்.
இன்று நடைபெற உள்ள பேராளர்கள் மாநாட்டில் முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட உள்ளன.
நிறைவேற்றப்பட உள்ள தீர்மானங்கள்:
-வடக்கு கிழக்கு பிராந்தியங்களுக்கு அர்த்தமுள்ள அதிகாரப் பகிர்வு ஊடாக தீர்வு காணப்படவேண்டும். முஸ்லிம் மக்களின் அபிலாஷைகளையும் அங்கீகரிப்பதாக அந்தத் தீர்வு அமையவேண்டும்.
- சிவில் நிர்வாகத்தில் இராணுவ தலையீட்டை முற்றாக இல்லாமல் செய்ய வேண்டும். அனைத்துப் பகுதிகளிலும் சிவில் நிர்வாகம் ஏற்படுத்தப்படவேண்டும்.
- புலம்பெயர்ந்த மக்கள் இங்கு நடைபெறும் புனர்வாழ்வு, புனரமைப்புத் திட்டங்களுக்கு நிதியுதவி, நிபுணத்துவ உதவி ஆகியவற்றை வழங்க வேண்டும். இதற்கு தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகள் சேர்த்துக்கொள்ளப்பட வேண்டும். இங்கு நடைபெறும் அரசியல் போராட்டங்களுக்கு தமது ஆதரவை புலம்பெயர்ந்த மக்களும் வழங்க வேண்டும்.
- உரிமைகளை வெற்றெடுப்பதற்கு நடத்தப்படும் போராட்டத்துக்கு எமது மக்கள் முழுமையான ஆதரவை வழங்கி ஒத்துழைக்க வேண்டும். அத்துடன் முற்போக்கு சக்திகளும், முஸ்லிம் சமூகம் உள்ளிட்டோரும் போராட்டத்தை மேலும் வலுப்படுத்த உதவவேண்டும் என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட இருக்கின்றன.