இலவச லேப்டாப் வழங்காவிட்டால் பிளஸ் டூ மார்க் ஷீட்டில் குறிப்பிட உத்தரவு!
மாநிலம் முழுவதும் பிளஸ் டூ படிக்கும் அனைத்து மாணவ, மாணவிகளுக்கும் இலவச லேப்டாப் வழங்க அரசு திட்டமிட்டது. ஆனால் பெரும்பாலான மாணவர்களுக்கு இன்னும் லேப்டாப் வழங்கப்படவில்லை. பிளஸ் டூ தேர்வு முடிவுகள் வெளியாகிவிட்ட நிலையில் லேப்டாப் கிடைக்காத மாணவர்கள் மத்தியி்ல் இது அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் பள்ளி கல்வித் துறை சார்பில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களுக்கு அனுப்பப்பட்டுள்ள சுற்றறிகையில் கூறியிருப்பதாவது,
2011-12 கல்வி ஆண்டின் 10ம் வகுப்பு, பிளஸ் டூ பொதுத் தேர்வு மதிப்பெண் சான்றிதழ்கள் பல்வேறு பாதுகாப்பு அம்சங்களோடு மாணவர்களுக்கு வழங்கப்படுவதால் ஏற்கனவே நடைமுறையில் இருக்கின்ற மதிப்பெண் சான்றிதழ்களின் பின்புறம் வைக்கப்படும் முத்திரை இந்த ஆண்டு முதல் தவிர்க்கப்பட வேண்டும். லேப்டாப் வழங்க வேண்டிய மாணவ, மாணவிகளுக்கு மதிப்பெண் சான்றிதழ் வழங்கும்போது சான்றிதழ்களின் பின்புறம் லேப்டாப் வழங்கப்படவில்லை என்ற பதிவு அனைத்து தலைமை ஆசிரியர்களாலும் மேற்கொள்ளப்பட வேண்டும்.
லேப்டாப் வழங்கப்பட வேண்டிய மாணவ, மாணவியர்களின் முழு முகவரி, மற்றும் தொலைபேசி எண் போன்றவற்றை தலைமை ஆசிரியர்கள் பராமரிக்க வேண்டும். அரசு மூலம் பள்ளிகளுக்கு லேப்டாப் வழங்கப்படவுடன் மாணவ, மாணவியருக்கு தெரிவித்து அவர்களுக்கு வழங்க உரிய தொடர்பு நடவடிக்கையை தலைமை ஆசிரியர்கள் எடுக்க வேண்டும். அவ்வாறு வழங்கும்போது மாணவ, மாணவிகளின் மதிப்பெண் சான்றிதழ்களில் லேப்டாப் வழங்கப்பட்டது என்பதை பதிவு செய்ய வேண்டும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.