அகிலேஷை சந்தித்த பில்கேட்ஸ்- உ.பி வளர்ச்சிக்கு உதவ 'ரெடி'!
மைக்ரோ சாப்ட் மென்பொருள் நிறுவனத்தின் நிறுவனர் பில்கேட்ஸ் ஒருநாள் பயணமாக உத்தர பிரதேச மாநிலத்திற்கு வந்தார். மாநில முதல்வர் அகிலேஷ் யாதவை அவரது அலுவலக இல்லத்தை சந்தித்து பேசிய பில்கேட்ஸ், உத்தர பிரதேச மாநிலத்தில் நடைபெற உள்ள பல நலத்திட்டங்களை குறித்து ஆலோசித்தார். இந்த சந்திப்பின் போது, பில் மற்றும் மெலிண்டா கேட்ஸ் அறக்கட்டளை உறுப்பினர்களும் கலந்து கொண்டனர்.
இச்சந்திப்பின் போது, உத்தர பிரதேச மாநிலத்தின் சுகாதாரம், விவசாயம் மற்ற வளர்ச்சி பணிகளுக்கு தனது அறக்கட்டளையின் மூலம் உதவுவதாக பில்கேட்ஸ் தெரிவித்தார். இதற்கான ஒப்பந்தத்தில் இரு தரப்பினரும் கையெழுத்திட்டனர்.
மாநிலத்தில் நிலவி வரும் அடிப்படை சுகாதார வசதிகளுக்கான குறைவு மூலம் தாய்-சேய் இறப்பு விகிதம் அதிகரிப்பு, தடுப்பூசிகள் போடுவதில் குறைப்பாடு, சத்துணைவு குறைவு உள்ளிட்ட பிரச்சனைகள் குறித்து இருவரும் விவாதித்தனர்.
காசநோய், மஞ்சள் காமாலை போன்ற பரவல் நோய்கள் மாநில அரசிற்கு பெரும் சவாலாக இருப்பதாகவும் மாநில முதல்வர் அகிலேஷ் யாதவ் எடுத்து கூறினார். மாநிலத்தின் ஐடி துறையில் முன்னேற்றம் காணும் வகையில், தேவையான உதவிகளை வழங்குமாறும் பில்கேட்ஸை, அகிலேஷ் யாதவ் கேட்டு கொண்டார். இந்த தகவலை சமாஜ்வாதி தலைவர் அனுப்ரியா படேல் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.