செஸ் உலக சாம்பியன் பட்டத்தை வென்ற விஸ்வநாதன் ஆனந்திற்கு முதல்வர் பாராட்டு!
சென்னை: உலக செஸ் சாம்பியன்ஷிப் பட்டத்தை 5வது முறையாக வென்ற இந்திய வீரர் விஸ்வநாதன் ஆனந்துக்கு, தமிழக முதல்வர் ஜெயலலிதா பாராட்டு தெரிவித்தார்.
ரஷ்யாவில் உள்ள மாஸ்கோவில் உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டி நடைபெற்றது. நேற்று நடைபெற்ற இதன் இறுதிப் போட்டியில் இஸ்ரேல் வீரரை வீழ்த்திய இந்தியாவின் விஸ்வநாதன் ஆனந்த் உலக சாம்பியன் பட்டத்தை தக்க வைத்து கொண்டார். 5வது முறை முறையாக உலக சாம்பியன் பட்டத்தை வெல்லும் விஸ்வநாதன் ஆனந்துக்கு, தமிழக முதல்வர் ஜெயலலிதா பாராட்டு தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள பாராட்டுச் செய்தியில் கூறியிருப்பதாவது
விஸ்வநாதன் ஆனந்த் 5வது முறையாக உலக செஸ் சாம்பியன் பட்டம் வென்றதை அறிந்து நான் மகிழ்ச்சி அடைந்தேன். மிகவும் கடினமான டை-பிரேக்கர்' ஆட்டங்களுக்கு பிறகு, இந்த பெருமை மிகு பட்டத்தை வென்றுள்ளார்.
இதன்மூலம் தமிழகத்திற்கும், இந்தியாவிற்கும் விஸ்வநாதன் ஆனந்த் பெருமை சேர்த்துள்ளார். மகத்தான வெற்றியை பெற்ற தங்களுக்கு என் பாராட்டை தெரிவிக்கிறேன். இன்னும் பல வெற்றிகள் பெற வாழ்த்துகிறேன் என்று அந்த பாராட்டு செய்தியில் தெரிவித்துள்ளார்.