குற்றாலத்தில் காற்றின் வேகம் அதிகரிப்பு-சீசன் விரைவில் துவங்க வாய்ப்பு
குற்றாலத்தில் ஆண்டுதோறும் ஜூன், ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதஙகள் சீசன் காலம் ஆகும். சீசன் காலத்தில் மேற்கு தொடர்ச்சி மலையில் அவ்வப்போது மேக கூட்டம் திரண்டு மெல்லிய சாரல் விழும். மனதையும், உடலையும் வருடி செல்லும் இதமான தென்றல் காற்றும் அடிக்கடி மஞ்சள் வெயிலுமாக சீசன் ரம்மியாக இருக்கும்.
அரியவகை மூலிகைகள் நிறைந்த மேற்கு தொடர்ச்சி மலையில் இருந்து தண்ணீர் பல கிலோ மீட்டர் தொலைவிற்கு ஆறாக ஓடிவந்து மெயின் அருவி, ஐந்தருவி ஆகியவற்றில் வெள்ளியை உருக்கிவிட்டது போல் தண்ணீர் கொட்டும். இத்தகைய அருவிகள் உலகில் ஒருசில பகுதிகளில் மட்டுமே காணப்படுகின்றன.
குற்றாலத்தில் சீசன் நேரத்தில் ஆண்டுதோறும் 50 லட்சத்திற்கும் அதிகமான சுற்றுலா பயணிகள் வந்து அருவியில் நீராடி செல்கின்றனர். இந்த நிலையில் கடந்த 2 நாட்களாக குற்றாலத்தில் காற்றின் வேகம் அதிகமாக உள்ளது. ஏற்கனவே கேரளாவில் தென்மேற்கு பருவ மழை துவங்கிவிட்ட நிலையில், காற்றின் வேகம் அதிகரித்துள்ளதால் விரைவில் குற்றால சீசன் துவங்கும் என்ற நம்பிக்கை ஏற்பட்டுள்ளது.
காற்றின் வேகமும், அழுத்தமும் நன்றாக இருப்பதால் தென்காசி மற்றும் சுற்றுப் பகுதிகளில் காற்றாலை மின் உற்பத்தி அதிகரித்துள்ளது. இதனால் அங்கு மின்தடை வெகுவாக குறைந்துள்ளது.