ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக் அரசுக்கு திடீர் நெருக்கடி-அதிருப்தி அமைச்சர்கள் போர்க்கொடி
புவனேஸ்வர்: ஒடிசாவின் ஆளும் பிஜூ ஜனதா கட்சியில் மூத்த அமைச்சர்கள் சிலர் அதிருப்தியை வெளிப்படுத்தியிருப்பதால் அம்மாநில அரசுக்கு நெருக்கடி ஏற்பட்டிருப்பதாக தெரிகிறது.
ஒடிசா முதலமைச்சர் நவீன் பட்நாயக் லண்டன் சென்றிருந்தபோது, அவர் தலைமையிலான பிஜு ஜனதா தளம் கட்சியில் உள்ள அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் மற்றும் அமைச்சர்கள் 33 பேர், அந்த கட்சியைச் சேர்ந்த பியாரி மோகன் மொகாபாத்ரா எம்.பி. தலைமையில் ரகசிய ஆலோசனையில் ஈடுபட்டனர். இதனால் பிஜூ ஜனதா தளவு பிளவுபடும் அபாயம் ஏற்பட்டது. மேலும் 12 ஆண்டுகளாகத் தொடர்ந்து ஆட்சியில் இருக்கும் நவீன் பட்நாயக் தலைமையிலான அரசுக்கு நெருக்கடி நிலைமை ஏற்பட்டது.
இந்நிலையில் நவீன் பட்நாயக் தன்னுடைய லண்டன் பயணத்தை முடித்துக் கொண்டு, அவசரம் அவசரமாக ஒடிசா திரும்பினார். டெல்லி விமான நிலையத்தில் வந்து இறங்கிய அவர், அவுரங்கசீப் சாலையில் உள்ள அவருடைய இல்லத்தில் எம்.பி.க்கள் பைஜெயந்த் பாண்டா மற்றும் பினாகி மிஸ்ரா ஆகியோருடன் கட்சியின் நிலைமை குறித்து பேசினார். பின்னர் ஒடிசா மாநிலம் புவனேசுவரத்திற்கு புறப்பட்டு சென்றார். அவருக்கு விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. இதில் பெரும்பாலான எம்.எல்.ஏ.க்கள், அமைச்சர்கள் கலந்து கொண்டனர். மேலும் நவீன் பட்நாயக் ஆதரவாளர்கள், எம்.எல்.ஏக்களிடம் கையெழுத்து வேட்டையும் ந்டத்தினர்.
இதைத் தொடர்ந்து கட்சிக்குள் எதனால் பிரச்சனை எழுந்தது? இதற்கு எப்படி தீர்வு காண்பது? என்பது குறித்து நவீன் தமது ஆதரவாளர்களுடன் தீவிர ஆலோசனை நடத்தி வருகிறார்.