தலைமை தேர்தல் ஆணையரை தேர்வு செய்யும் முறையை மாற்றுக: மன்மோகன்சிங்குக்கு அத்வானி கடிதம்
டெல்லி: நாட்டின் தலைமை தேர்தல் ஆணையர் மற்றும் கணக்குத் தணிக்கைக் குழுத் தலைவர் ஆகியோரை தேர்வு செய்யும் முறையை மாற்றியமைக்க வலியுறுத்தி பிரதமர் மன்மோகன்சிங்குக்கு மூத்த பாஜக தலைவர் எல்.கே. அத்வானி கடிதம் அனுப்பியுள்ளார்.
தற்போதைய தலைமை தேர்தல் ஆணையர் குரேசியின் பதவிக் காலம் இந்த மாதத்தில் முடிவடைய உள்ளது. இதனால் தலைமைத் தேர்தல் ஆணையர் நேர்மையானவராகவும் அனைத்து கட்சிகளும் ஏற்கக் கூடியவராகவும் இருக்க வேண்டும் என்பது அத்வானியின் கருத்து.
இது தொடர்பாக பிரதமர் மன்மோகன்சிங்குக்கு அத்வானி எழுதிய கடிதத்தில், பிரதமர், சட்ட அமைச்சர், உச்சநீதிமன்ற தலைமை நீபதி, மக்களவை, மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவர் ஆகியோர் அடங்கிய குழுதான் நாட்டின் தலைமை தேர்தல் ஆணையரை தேர்வு செய்ய வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.
இதே முறையைத்தான் கணக்கு தணிக்கைக் குழு தலைவரைத் தேர்வு செய்யும்போதும் பின்பற்ற வேண்டும் என்றும் அத்வானி சுட்டிக்காட்டியுள்ளார்.
ஆனால் காங்கிரஸ் கட்சி இதனை நிராகரித்துள்ளது. பாஜகவில் நிகழ்ந்து வரும் உட்கட்சி மோதலை மறைப்பதற்காகவே இப்படியொரு கடிதத்தை அத்வானி எழுதியிருக்கிறார் என்று காங்கிரஸ் குற்றம்சாட்டியுள்ளது.