பசுபதி பாண்டியன் கொலை வழக்கில் தொடர்புடைய 3 பேரை குண்டுவீசி கொல்ல முயற்சி
திண்டுக்கல்: பசுபதி பாண்டியன் கொலை வழக்கில் தொடர்புடைய முக்கிய குற்றவாளிகளான நடராஜ், மாடசாமி, சன்னியாசி ஆகிய மூன்று பேரை வெடிகுண்டு வீசி கொல்ல முயற்சி நடந்துள்ளது.
தேவேந்திர குல வேளாளர் கூட்டமைப்பின் தலைவர் பசுபதி பாண்டியன் கடந்த ஜனவரி 10ம் தேதி அன்று இரவு திண்டுக்கல் மாவட்டம் நந்தவனபட்டியில் உள்ள அவரது வீட்டு முன் ஒரு கும்பலால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். மூலக்கரை சுபாஷ் பண்ணையார் குடும்பத்தினருக்கும், இவருக்கும் இருந்த வந்த முன்பகையே இதற்கு காரணம் என போலீஸ் விசாரணையில் தெரிய வந்தது. இதையடுத்து இந்த வழக்கில் சுபாஷ் பண்ணையார் முதல் குற்றவாளியாக சேர்க்கப்பட்டார்.
மொத்தம் 18 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. இதில் 6 பேர் கைது செய்யப்பட்டனர். சிலர் நீதிமன்றத்தில் சரண் அடைந்தனர்.
இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட நடராஜ், மாடசாமி, சன்னியாசி ஆகியோர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர். அவர்கள் தினமும் திண்டுக்கல் தாடிக்கொம்பு காவல் நிலையத்தில் ஆஜராகி கையெழுத்திட வேண்டும் என்று நீதிபதி உத்தரவிட்டிருந்தார்.
அதன்படி அவர்களும் கையெழுத்திட்டு வந்தனர். இந்நிலையில் இன்று காலை தாடிக்கொம்பு காவல் நிலையத்தில் கையெழுத்திட்டுவிட்டு காரில் சென்று கொண்டிருந்தனர். அப்போது மர்ம கும்பல் ஒன்று அவர்கள் கார் மீது நாட்டு வெடிகுண்டை வீசிவிட்டு அங்கிருந்து தப்பியோடியது. இதில் கார் டிரைவர் உள்பட அதில் இருந்த 4 பேர் காயம் அடைந்தனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
கடந்த சில நாட்களுக்கு முன்பு இதே வழக்கில் ஜாமீனில் வெளிய உள்ள குற்றவாளியான கோழி அருள் நெல்லை மாவட்டம் சுரண்டை காவல் நிலையத்தில் ஆஜராகி கையெழுத்திட்டுவிட்டு வந்தபோது அவரை கொல்ல முயற்சி நடந்தது என்பது குறிப்பிடத்தக்கது.