அங்கம்மாள் காலனி விவகாரத்தில் முன்னாள் அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம் சென்னையில் கைது
சேலம் புதிய பேருந்து நிலையம் அருகே உள்ள அங்கம்மாள் காலனி இடத்தை முன்னாள் திமுக அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகமும், அவரது ஆட்களும் அபகரித்துக் கொண்டதாக எழுந்த புகாரை அடுத்து அவர் மீது நில அபகரிப்பு வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. இந்நிலையில் அங்கம்மாள் காலனியில் முன்பு வசித்தவர்கள் சிலர் அங்கு வந்து மீண்டும் குடிசை போட்டு அந்த இடத்திற்கு காவேரி நகர் என்று பெயர் சூட்டினர். இந்நிலையில் நேற்றிரவு 30க்கும் மேற்பட்டோர் அந்த காலனிக்கு வந்து ஒரு குடிசைக்கு தீ வைத்தனர். மேலும் அங்குள்ள 10க்கும் மேற்பட்ட குடிசைகளை சூறையாடினர். அஙகுள்ளவர்களையும் மிரட்டியுள்ளனர் என்று கூறப்படுகிறது.
இதற்கு காரணம் வீரபாண்டி ஆறுமுகம் தான் என்று அந்த குடிசைவாசிகள் கொடுத்த புகாரின்பேரில் சேலம் பள்ளப்பட்டி போலீசார் வீரபாண்டி ஆறுமுகம் உள்பட 20 பேர் மீது வழக்குப்பதிவு செய்தனர். இதையடுத்து வீரபாண்டி ஆறுமுகத்தை கைது செய்ய போலீசார் சென்னை தி.நகரில் உள்ள அவரது வீட்டுக்கு சென்றனர். ஆனால் அப்போது அவர் வீட்டில் இல்லை. கட்சி வேலையாக அண்ணா அறிவாலயத்திற்கு சென்றிருந்தார். இதையடுத்து வீரபாண்டியாரின் வீடு முன்பு போலீஸ் குவிக்கப்பட்டனர். அவர் வீடு திரும்பியதும் போலீசார் அவரை கைது செய்தனர்.