கேரளாவில் ஐஜி, டிஐஜி உள்பட 533 போலீசார் மீது கிரிமினல் வழக்கு
திருவனந்தபுரம்: கேரள காவல் துறையில் ஐஜி, டிஐஜி உள்பட 533 போலீசார் மீது கிரிமினல் வழக்குகள் உள்ளன.
கேரளாவில் கடந்தாண்டு நடந்த காவலர் எழுத்து தேர்வி்ல் தேர்வான 30 பேருக்கு கேரள அரசு தேர்வாணையம் பணி ஆணை வழங்கியது. பின்னர் அவர்களுக்கு பணி வழங்கப்படவில்லை. இதையடுத்து 30 பேரும் கேரள உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். அதில் எங்களுக்கு பணி நியமனம் வழங்க அரசுக்கு உத்தரவிட வேண்டும் என குறிப்பிட்டிருந்தனர். மனுவை விசாரித்த உயர் நீதிமன்றம் இது குறித்து விளக்கம் அளிக்கும்படி கேரள உள்துறைக்கு உத்தரவிட்டது. கேரள உள்துறை சார்பில் தாக்கல் செய்யப்பட்ட பதில் மனுவி்ல் காவலர் பணிக்கு தேர்வான 30 பேர் மீதும் கிரிமினல் வழக்குகள் உள்ளதால் அவர்களுக்கு பணி நியமனம் வழங்கப்படவில்லை என கூறப்பட்டது.
பின்னர் கேரள டிஜிபிக்கு உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவில், காவல் துறையில் கிரிமினல்கள் சேர்வது நாட்டுக்கே ஆபத்து. எனவே தற்போது கேரள காவல் துறையில் எத்தனை பேர் மீது கிரிமினல் வழக்குகள் உள்ளது என்பது குறித்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று கூறியது. இதன்படி உயர் நீதிமன்றத்தில் கேரள டிஜிபி ஜேக்கப் புன்னுஸ் நேற்று தாக்கல் செய்த அறிக்கையில் கேரள காவல்துறையில் உள்ள 533 பேர் மீது கிரிமினல் வழக்குகள் உள்ளதாக தெரிவித்துள்ளார்.
இந்த பட்டியலில் அரசின் அனுமதியின்றி வெளிநாடு சென்ற புகாரில் சஸ்பெண்ட் செய்யப்பட்ட ஐஜி டோமின் தச்சங்கரி, கண்ணூர் சரக டிஐஜியாக இருந்த ஸ்ரீஜித் ஆகியோரும் இடம் பெற்றுள்ளனர். திருவனந்தபுரம் மாவட்டத்தில் தான் அதிகமான போலீசார் மீது கிரிமினல் வழக்குகள் உள்ளன.