நான் அடிச்சிருக்கக் கூடாது... மக்கள் மத்தியில் 'கிஸ்' கொடுத்து இணைந்த காதலர்கள்!
கோபிச்செட்டிப்பாளையம்: கோபத்தில் அடித்துக் கொண்ட காதல் ஜோடி, போலீஸாரின் தலையீட்டின் பேரில் கோபி அரசு மருத்துவமனையில் வைத்து சமரசமானது. அப்போது டாக்டர்கள், நர்ஸுகள், போலீஸார், பொதுமக்கள் முன்னிலையில் இருவரும் கட்டிப்பிடித்து முத்தமிட்டு ஒருவருக்கொருவர் சாரி கேட்டுக் கொண்டு உருகியது, அனைவரையும் நெகிழ வைத்தது.
ஈரோடு மாவட்டம் கோபிச்செட்டிப்பாளையத்தை அடுத்துள்ள கரட்டடிபாளையத்தை சேர்ந்தவர் ராகுல். கார் டிரைவர். அப்பகுதியை சேர்ந்த பிளஸ் 2 படித்த ராகினியை காதலித்து வருகிறார்.
சில நாட்களாக ராகுல் போன் செய்தபோது ராகினி எடுக்கவில்லை என்று தெரிகிறது. இதனால் கோபமடைந்த ராகுல், நேராக ராகினி வீட்டுக்குப் போனார். வீட்டில் ராகினி மட்டும் இருந்தார். கோபத்தில் ராகினியை சரமாரியாக கன்னத்தில் அடித்து விட்டார் ராகுல். பி்ன்னர் அங்கிருந்து போய் விட்டார்.
இதுகுறித்து தகவல் அறிந்ததும், ராகினியை அவரது பெற்றோர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். போலீஸிலும் புகார் கொடுத்தனர். போலீஸார், ராகுலை காவல் நிலையத்திற்கு வரவழைத்து விசாரித்தனர். இதை அறிந்த ராகினி பதறிப் போனார்.
எனது காதலர்தான் அடித்தார். அவர் மீது வழக்கு வேண்டாம். நான் அவரை பார்க்க வேண்டும், அழைத்து வாருங்கள் என்று போலீஸாரிடம் கதறியழுதார். இதையடுத்து ராகுலை கூட்டி வந்தனர் போலீஸார்.
இந்த விவகாரத்தால் அங்கு கூட்டம் கூடி விட்டது. ராகுலைப் பார்த்த ராகினி எழுந்து ஓடி அவரைக் கட்டிப் பிடித்து அழுதார். ராகுலும் அழுதார். பி்ன்னர் நான் அடித்திருக்கக் கூடாது என்று ராகுல் சொல்ல, பேசாமல் இருந்திருக்கக் கூடாது என்று ராகினி அழ, இருவரும் மாறி மாறி முத்தமிட்டுக் கொண்டனர்.
இந்த காதல் ஜோடியின் பாசத்தைப் பார்த்து அங்கு கூடியிருந்த போலீஸார், டாக்டர்கள், நர்ஸுகள், பொதுமக்கள் திகைத்துப் போய் நெகிழ்ந்து நின்றனர். பின்னர் காதல் ஜோடி அங்கிருந்து கிளம்பிச் சென்றது.
காதல்ன்னாலே பாசம்ய்யா...!