வீரபாண்டியாருக்கு ஆதரவாக செயல்பட்ட எஸ்.ஐ.க்கள், ஏட்டு சஸ்பெண்ட்: கமிஷனர் மாஹாலி அதிரடி
சேலம் புதிய பஸ் நிலையம் அருகில் அங்கம்மாள் காலனி உள்ளது. அங்கு குடியிருந்த மக்களை அங்கிருந்து வெளியேற்ற திமுக முன்னாள் அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம் தரப்பு கடந்த திமுக ஆட்சியில் கடும் முயற்சி செய்ததாகக் கூறப்படுகின்றது. அப்போது அங்கிருந்த குடிசைகளுக்கு நள்ளிரவில் மர்ம நபர்கள் சிலர் தீ வைத்து விட்டு தப்பிவிட்டனர். இதனால் பாதிக்கப்பட்ட மக்கள் காவல் நிலையத்திலும், கலெக்டர் அலுவலகத்திலும் புகார் கொடுத்தும் குற்றவாளிகள் கைது செய்யப்படவில்லை.
இந்த நிலையில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு அதிமுக ஆட்சி அமைந்தது. தற்போது மீண்டும் அங்கம்மாள் காலனியில் உள்ள ஒரு குடிசைக்கு கடந்த 2ம் தேதி இரவு மர்ம நபர்கள் தீவைத்தனர். மேலும் 10 குடிசைகளை சூறையாடிவிட்டு தப்பியோடினர்.
இதனையடுத்து கணேசன் என்பவர் கொடுத்த புகாரின் பேரில் வீரபாண்டி ஆறுமுகம் உள்பட 20 பேர் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்தனர். இந்த வழக்கில் வீரபாண்டி ஆறுமுகம் சென்னையில் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டார். தற்போது வோலூர் சிறைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
இந்த வழக்கில் வீரபாண்டி ஆறுமுகத்திற்கு ஆதரவாக செயல்பட்டதாலும், வழக்கை அலட்சியப்படுத்தியதாலும், பணியில் சரிவர செயல்படாத காரணத்தினாலும் பள்ளப்பட்டி எஸ்.ஐ. தேவேந்திரன், சிறப்பு எஸ்.ஐ. பன்னீர், ஏட்டு கோவிந்தன் ஆகிய மூன்று பேரை சேலம் போலீஸ் கமிஷனர் மாஹாலி சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டார்.