தாய்லாந்தில் நடைபெற்று வரும் தாய்லாந்து கிராண்ட பிரிக்ஸ் கோல்ட் பாட்மின்டன் தொடரின் பெண்கள் ஒற்றையர் பிரிவின் 2ம் சுற்று போட்டியில் நேற்று வெற்றி பெற்ற இந்தியாவின் சாய்னா நேவால் காலிறுதி போட்டிக்கு தகுதி பெற்றார். இந்த நிலையில் இன்று நடைபெற்ற காலிறுதிப் போட்டியில் இந்தியாவின் சாய்னா நேவால், தாய்லாந்தின் ஷாப்சிரி தயிரடன்சயியை எதிர்கொண்டார்.
உலக பாட்மின்டன் தரவரிசையில் 5வது இடத்தில் உள்ள சாய்னா நேவால் இன்றைய போட்டியில் துவக்கம் முதலே அதிரடியாக ஆடினார். அவரது தாக்குதலை எதிர்கொள்ள முடியாமல் தவித்த ஷாப்சிரி துவக்கத்திலேயே இடைவெளி இல்லாமல் 8 புள்ளிகளை இழந்தார்.
சிறப்பாக ஆடிய சாய்னா நேவால் இறுதியில் 21-10, 22-20 என்ற செட்களில் வெற்றி பெற்றார். இதன்மூலம் அரையிறுதிப் போட்டிக்கு அவர் முன்னேறி உள்ளார்.
கடந்த மார்ச் மாதம் ஸ்விஸ் ஓபன் கிரண்ட் பிரிக்ஸ் கோல்ட் பட்டத்தை வென்ற சாய்னா நேவால் தற்போது தாய்லாந்து ஓபன் கிரண்ட பிரிக்ஸ் கோல்ட் பட்டத்தை எதிர் நோக்கி உள்ளார். மேலும் சாய்னா நேவால் இந்த ஆண்டு நடைபெற உள்ள லண்டன் ஒலிம்பிக் போட்டியில் இந்தியாவிற்கு தங்கம் வென்று தருவார் என்ற எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளார்.