தற்கொலை செய்து கொள்ளும் அமெரிக்க ராணுவத்தினரின் எண்ணிக்கை அதிகரிப்பு
நடப்பு 2012-ம் ஆண்டில் முதல் 155 நாட்களில் 154 அமெரிக்க ராணுவத்தினர் தற்கொலை செய்து கொண்டிருக்கின்றனர். இவர்களில் 50 விழுக்காட்டினர் ஆப்கானில் நிலை கொண்டிருக்கும் அமெரிக்கப் படையினர் என்கிறது பென்டகன் வெளியிட்டிருக்கும் ஆய்வறிக்கை. கடந்த ஆண்டு இதே காலத்தில் 130 பேர் தற்கொலை செய்திருந்தனர் என்றும் கடந்த ஆண்டை ஒப்பிடுகையில் 18 விழுக்காடு அதிகம் என்றும் அந்த அறிக்கை கூறுகிறது.
கடந்த 10 ஆண்டுகளில் இந்த தற்கொலை எண்ணிக்கை அதிகம் என்பதும் அறிக்கையின் சாராம்சம்.
பாலியல் குற்றச்சாட்டு, அதிகளவில் மதுபயன்பாடு, வீடுகளில் வன்முறை போன்ற விவகாரங்களிலும் ஈடுபடும் அமெரிக்க ராணுவத்தினரின் எண்ணிக்கை கணிசமாகவே உயர்ந்திருப்பதாகக் கூறபடுகிறது.
மேலும் கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக போரில் ஈடுபடுத்தப்பட்டிருக்கும் அமெரிக்கப் படையினர் மன அழுத்தங்களுக்கு ஆட்பட்டவர்களாகவே இருக்கின்றனர் என்றும் அந்த அறிக்கை தெரிவிக்கிறது.