தனி நுழைவுத் தேர்வு நடத்தப் போவதாக கான்பூர் ஐஐடி அறிவிப்பு
டெல்லி: மத்திய அரசின் பொது நுழைவுத் தேர்வு திட்டத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்து 2013-ம் கல்வி ஆண்டில் தனி நுழைவுத் தேர்வை நடத்தப் போவதாக கான்பூர் ஐஐடி நிர்வாகம் அறிவித்துள்ளது.
மத்திய அரசின் நிதியுதவியுடன் செயல்படும் பொறியியல் மற்றும் மேலாண்மைக் கல்வி நிறுவனங்களுக்கு பொதுவான நுழைவுத் தேர்வினை நடத்துவது என்பது மத்திய அரசின் திட்டம். இதற்கு பல முனைகளிலிருந்தும் கடும் எதிர்ப்பு கிளம்பி வருகிறது. ஐஐடி கல்வி நிறுவனங்களின் முன்னாள் மாணவர்கள் பலரும் இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர்.
இந்நிலையில் கான்பூர் ஐஐடியில் 60க்கும் மேற்பட்ட பேராசிரியர்கள் கலந்து கொண்ட ஆலோசனைக் கூட்டம் நேற்று நடைபெற்றது. இந்த கூட்டத்துக்கு கான்பூர் ஐஐடி இயக்குநர் தாண்டே தலைமை வகித்தார். இக்கூட்டத்தில் பொது நுழைவுத் தேர்வை 2014-ம் ஆண்டு கல்வி ஆண்டுக்கு வேண்டுமானால் பரிசீலிக்கலாம்.. 2013-ம் ஆண்டுக்கு தனியே நுழைவுத் தேர்வு நடத்த கான்பூர் ஐஐடி சார்பில் தனிக் குழு அமைக்கப்படும் என்று முடிவெடுக்கப்பட்டது.
கான்பூர் ஐஐடியின் தீர்மானம் குறித்து மத்திய அமைச்சர் கபில்சிபல் கருத்து எதுவும் கூறவில்லை. இத்தீர்மானம் பற்றி ஆராய்ந்து வருவதாக மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
இதனிடையே கான்பூர் ஐஐடி தீர்மானத்தைப் பின்பற்றி மற்ற ஐஐடிகளும் தனி நுழைவுத் தேர்வு நடத்தக் கூடும் எனவும் கூறப்படுகிறது.