நித்தியானந்தா மீது நடவடிக்கை எடுக்கப்படும்-சதானந்த கெளடா
பிடதியில் உள்ள நித்தியானந்தா மடத்திற்குள் பத்திரிக்கையாளர் ஒருவர் தாக்கப்பட்டதாக கூறப்படுகிறது. தாக்கப்பட்டதாக கூறப்படுபவர் கன்னடப் பத்திரிக்கையாளர் என்பதால் கர்நாடகத்தில் நித்தியானந்தாவுக்கு எதிராக போராட்டம் வெடித்துள்ளது.
நித்தியானந்தாவை கர்நாடகத்தை விட்டு வெளியேற்ற வேண்டும் என்று கோரி பல இடங்களிலும் போராட்டங்கள் நடந்து வருகி்ன்றன. போலீஸாரும் நித்தியானந்தா மீது வழக்கு தொடர்ந்துள்ளனர். இதையடுத்து அவர் தலைமறைவாகி விட்டார்.
இந்த நிலையில் நித்தியானந்தா மடத்தை கையகப்படுத்துவோம் என்று கர்நாடக அமைச்சர் சுரேஷ் குமார் கூறியுள்ளார்.
இதுகுறித்து மங்களூரில் செய்தியாளர்களிடம் முதல்வர் சதானந்தா கெளடா கூறுகையில், ராமநகர மாவட்ட ஆட்சித் தலைவர், எஸ்.பி. ஆகியோரிடம் இந்த விவகாரம் தொடர்பாக அறிக்கை கேட்கப்பட்டுள்ளது. அறிக்கை கிடைத்ததும் தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார் அவர்.