ஹோட்டல் ரூமில் விபச்சாரியுடன் உல்லாசமாக இருந்து சிக்கிய காங். தலைவர்!
பெரோஸ்பூர்: ஹோட்டல் ரூமில், விபச்சாரியுடன் உல்லாசமாக இருந்த பஞ்சாப் மாநில காங்கிரஸ் தலைவர் ஒருவர் போலீஸாரிடம் சிக்கி அவமானப்பட்டுள்ளார்.
அந்தத் தலைவரின் பெயர் மல்கிட் சிங். இவர் சிரோமணி அகாலிதள தலைவர் சுக்பீர் சிங் பாதலை எதிர்த்து ஜலாலாபாத் தொகுதியில் கடந்த சட்டசபை பொதுத் தேர்தலில் போட்டியிட்டு படு தோல்வி அடைந்தவர். ஞாயிற்றுக்கிழமையன்று இவர் ஒரு ஹோட்டலில் விபச்சாரப் பெண்ணுடன் உல்லாசமாக இருந்து கைதாகி இப்போது அவர் மீது வழக்குத் தொடரப்பட்டுள்ளது.
அந்த ஹோட்டலில் விபச்சாரம் நடந்தது தொடர்பாக ஐந்து பெண்கள் உள்பட 10 பேரை போலீஸார் கைது செய்துள்ளனர்.
இதுகுறித்து பெரோஸ்பூர் மாவட்ட சிறப்பு எஸ்.பி. ஹர்தியால் சிங் மான் கூறுகையில், கண்டோன்மென்ட் பகுதியில் உள்ள சில ஹோட்டல்களில் விபச்சாரம் நடப்பதாக தகவல் வந்தது. இதையடுத்து கிரீன் ஹோட்டல் மற்றும் டீலக்ஸ் கிரீன் ஹோட்டல் ஆகிய இரு ஹோட்டல்களில் ரெய்டு நடத்தினோம். அங்கு 6 ஜோடிகள் சிக்கினர்.
விபச்சாரப் பெண்களுடன் உல்லாசமாக இருந்து சிக்கியவர்களில் ஒருவரது பெயர் மல்கித் சிங். இவர் காங்கிரஸ் தலைவர் என்பது விசாரணையில் தெரிய வந்தது. அனைவரும் கைது செய்யப்பட்டனர் என்றார்.