2 நாளில் நித்தியானந்தாவைப் பிடிப்போம்-கர்நாடக முதல்வர்
நித்தியானந்தா விவகாரம் கர்நாடகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கனவே பாலியல் வழக்கில் சிக்கி கர்நாடக போலீஸாரால் கைது செய்யப்பட்ட நித்தியானந்தா தற்போது 2வது முறையாக கர்நாடக போலீஸாரிடம் சிக்கும் அபாயத்தில் இருக்கிறார்.
பத்திரிக்கையாளர்கள் மீது நித்தியானந்தா ஆதரவாளர்கள் நடத்திய தாக்குதலைத் தொடர்ந்து போலீஸார் வழக்குப் பதிவு செய்து 7 பேரை தூக்கி உள்ளே போட்டுள்ளனர். நித்தியானந்தாவையும் போலீஸார் கைது செய்ய முயற்சித்து வருகின்றனர்.ஆனால் நித்தியானந்தா தப்பி ஓடி விட்டார்.
இந்த நிலையில், நித்தியானந்தாவின் ஆசிரமத்தை கர்நாடக அரசு இன்று சீல் வைத்தது. ஆசிரமத்திற்குள் ரெய்டு நடத்தவும் உத்தரவிடப்பட்டுள்ளது. ஆசிரம சொத்துக்களை முடக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையே, பிடதி ஆசிரமத்தில் பத்திரிக்கையாளர்களுக்கும், நித்தியானந்தா ஆதரவாளர்களுக்கும் இடையே நடந்த மோதல் குறித்து முதல்வர் சதானந்த கெளடா இன்று டிஜிபி லால்ரோகுமா பச்சா உள்ளிட்ட உயர் காவல்துறை அதிகாரிகளுடன் முக்கிய ஆலோசனை நடத்தினார்.
அதன் பின்னர் அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், நித்தியானந்தாவை 2 நாளில் பிடித்து விடுவோம். நடந்த சம்பவம் குறித்து அறிக்கை அளிக்குமாறு பிராந்திய கமிஷனர் ஷாம்பு தயாள் மீனாவுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும் தியான பீடத்தின் அத்தனை இடங்களையும் சீல் வைக்குமாறு மாவட்ட ஆட்சித் தலைவர்,எஸ்பி ஆகியோருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. அந்த மடத்தில் நடந்த சட்டவிரோத செயல்கள் தொடர்பான அனைத்து ஆதாரங்களையும் திரட்டவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
நித்தியானந்தாவுக்கு வழங்கப்பட்டுள்ள ஜாமீனை ரத்துசெய்யத் தேவையான நடவடிக்கை குறித்து சட்ட அமைச்சகத்துடன் ஆலோசனை நடத்தப்படும் என்றார் கெளடா.