தமிழகத்தில் இந்திக்கு என்றும் இடமில்லை- மதிமுக போராட்டத்தில் வைகோ முழக்கம்
மத்திய அரசின் +2 பாடத் திட்டத்தில் தமிழகத்தில் நடைபெற்ற இந்தி எதிர்ப்பு போராட்டத்தை கொச்சைப்படுத்தும் வகையில் சித்திரம் இடம் பெற்றுள்ளது. இந்த கேலி சித்திரத்தை பாடத் திட்டத்தில் இருந்து உடனடியாக நீக்க வேண்டும் என்று கோரி, மதிமுக சார்பில் சென்னை மெமொரியல் ஹால் முன்பு நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இதில் கட்சியின் பொதுச்செயலாளர் வைகோ, அவைத் தலைவர் திருப்பூர் துரைசாமி, மாவட்டச் செயலாளர்கள் ஜீவன், வேளச்சேரி மணிமாறன் உட்பட பலர் பங்கேற்றனர். ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றவர்கள் மத்திய அரசுக்கு எதிராகவும், என்.சி.இ.ஆர்.டி. அதிகாரிகளுக்கு எதிராகவும் கோஷமிட்டனர்.
அப்போது செய்தியாளர்களிடம் பேசிய வைகோ கூறியதாவது
இந்தியை ஆட்சி மொழியாக மத்திய அரசு அறிவித்ததை எதிர்த்து கடந்த 1965ல் தமிழகத்தில் மாபெரும் எதிர்ப்பு போராட்டம் நடைபெற்றது. இதில் 8 பேர் தீக்குளித்து உயிர் நீத்தார்கள்.
வரலாற்றுச் சிறப்புமிக்க இப்போராட்டத்தை கொச்சைப்படுத்தும் வகையில் +2 பாடப் புத்தகத்தில் கேலிச் சித்திரம் இடம்பெற்றுள்ளது கண்டிக்கத்தக்கது. தமிழக மாணவர்கள் வன்முறையாளர்கள் என்றும், அவர்களுக்கு ஆங்கிலம் தெரியாது என்றும் அந்த கேலிச் சித்திரம் சித்திரிப்பதாக உள்ளது. அப்போது தமிழக மாணவர்கள் தான் அதிக அளவில் ஆங்கிலம் அறிந்திருந்தார்கள்.
எனவே இந்த கேலிச் சித்திரத்தை உடனடியாக நீக்க வேண்டும். அதுவரை மதிமுகவின் போராட்டம் தொடரும். இந்தி எதிர்ப்புப் போராட்டத்தின் போது நாட்டின் முதல் பிரதமர் நேரு அளித்த வாக்குறுதியைக் காப்பாற்ற மத்திய அரசு தவறிவிட்டது. தமிழகத்தில் தமிழ், ஆங்கிலம் மொழிகள் மட்டுமே இருக்க வேண்டும். இந்திக்கு என்றும் இடமில்லை என்றார்.