பேசாம, பிரதீபாவையே 2வது முறையும் குடியரசுத் தலைவராக்கி விட்டால் என்ன?
இதுவரை இல்லாத அளவுக்கு இந்த முறை குடியரசுத் தலைவர் வேட்பாளர் தேர்வில் பெருத்த குழப்பம் நிலவுகிறது.
முதலில் மன்மோகன் சிங்கை குடியரசுத் தலைவராக்கப் போகிறார்கள் என்று பேச்சு அடிபட்டது. பிறகு பிரணாப் முகர்ஜியின் பெயர் அடிபட்டது. அதன் பின்னர் பி.ஏ.சங்மா சீனுக்குள் வந்தார். அவருக்கு ஆதரவாக முதல்வர் ஜெயலலிதாவும், ஒடிஷா முதல்வர் நவீன் பட்நாயக்கும் குரல் கொடுத்தனர். ஆனால் பாஜக தரப்பு பம்மியபடியே இருந்தது.
பிறகு அப்துல் கலாமின் பெயர் ரவுண்டடிக்க ஆரம்பித்தது. இப்படி ஆரம்பத்தில் ஆங்காங்கே சில பெயர்கள் மட்டுமே வந்த நிலையில் திடீரென ஆளாளுக்கு ஒரு பெயர்ப் பட்டியலைத் தயாரித்து இவர்களையெல்லாம் ஜனாதிபதியாக்கினால் என்ன என்று காங்கிரஸை நோக்கி கேள்விக்கனைகளை வீசத் தொடங்கினர்.
கடைசியில் பார்த்தால் கரண் சிங், மோஷினா கித்வாய், கோபால கிருஷ்ண காந்தி, சோம்நாத் சாட்டர்ஜி, ஹமீத் அன்சாரி என பெயர் லிஸ்ட் பெருஸ்ஸாகிக் கொண்டே போகிறது.
ஒவ்வொரு கட்சியும் ஒரு பெயர் பட்டியலுடன் உள்ளது. இது காங்கிரஸ் தரப்பு விவகாரம். மறுபக்கம் தேசிய ஜனநாயகக் கட்சி இன்னும் ஒரு முடிவுக்கு வர முடியவில்லை. காங்கிரஸ் அறிவிக்கும் வேட்பாளரைப் பொறுத்தே அது தனது நிலையை தெரிவிக்கும் என்று கூறப்படுகிறது. அந்தக் கட்சி, எப்படியாவது குடியரசுத் துணைத் தலைவர் பதவியை வாங்கி விட வேண்டும் என்ற முனைப்பில் உள்ளதாக தெரிகிறது.
அடுத்த குடியரசுத் தலைவரைத் தேர்ந்தெடுக்க தற்போதைய நிலையில் எந்த கூட்டணிக்கும் பெரும்பான்மை பலம் இல்லை. காங்கிரஸ் கூட்டணியிடம், பாஜக கூட்டணியை விட சற்று கூடுதலான வாக்குகள் உள்ளன, அவ்வளவுதான். எனவே தேசிய ஜனநாயகக் கூட்டணியின் தயவும் அக்கட்சிக்குத் தேவைப்படுகிறது. அதேபோல இடதுசாரிகளின் ஆதரவும் அதற்கு மிகவும் முக்கியமானது.
ஆனால் வேட்பாளரை இறுதி செய்வதில் இதுவரை எந்தவிதமான நிலைப்பாட்டுக்கும் யாராலும் வர முடியாத நிலையே காணப்படுகிறது. முலாயம் சிங் யாதவும், மமதா பானர்ஜியும் புதிய பட்டியலைக் கையில் எடுத்துக் கொண்டு புதுக் குழப்பத்துக்கு பிள்ளையார் சுழி போட்டுள்ளனர். இவர்கள் கூறும் வேட்பாளரை நிச்சயம் காங்கிரஸ் ஏற்காது. அப்படி காங்கிரஸ் முடிவு செய்தால், அவர்கள் சொல்லும் வேட்பாளரை இவர்கள் இருவரும் ஏற்க மாட்டார்கள் என்பது உறுதி.
அதேசமயம், தங்களுக்கு ஆதரவான வேட்பாளரை காங்கிரஸ் தேர்வு செய்யாவிட்டால் சங்மாவையே தங்களது வேட்பாளராக அறிவித்து பாஜக கூட்டணி பல்டி அடிக்கலாம்.
இடதுசாரிகள் ஏகப்பட்ட கண்டிஷன்கள் போடுவார்கள். அவர்கள் எப்படியும் கடைசி வரை காங்கிரஸ் கூறும் வேட்பாளரை குறிப்பாக பிரணாப் முகர்ஜி, சோம்நாத் சாட்டர்ஜி என யாரையுமே ஏற்கப் போவதில்லை. ஒரு வேளை அப்துல் கலாமை நிறுத்தினால் ஆதரிக்கலாம். ஆனால் கலாமுக்கு 2வது முறை குடியரசுத் தலைவர் பதவியைத் தர காங்கிரஸுக்கு விருப்பமில்லை.
மொத்தத்தில் ஒவ்வொரு கட்சியும் ஒவ்வொரு வேட்பாளரைப் பரிந்துரைத்துக் கொண்டிருப்பதால் வேட்பாளரை தேர்வு செய்யும் பணி இப்போதைக்கு முடிவதைப் போலத் தெரியவில்லை.
இந்த நிலையில் பேசாமல் தற்போதைய குடியரசுத் தலைவர் பிரதீபா பாட்டீலையே மீண்டும் குடியரசுத் தலைவராக்கி விட்டால் என்ன என்ற கேள்வியும் ஒரு பக்கம் கிளம்ப ஆரம்பித்துள்ளது. பிரதீபா பாட்டீலுக்கு பதவி நீட்டிப்பு தந்து அனைவரும் சேர்ந்து மீண்டும் அவரை குடியரசுத் தலைவராக்கி விடலாம் என்று இந்த சிந்தனையாளர்கள் கருதுகின்றனர்.
மேலும், தேர்தல் நடத்துவதற்குப் பதில், ஒருமனதாக பிரதீபாவை தேர்ந்தெடுப்பதன் மூலம் தேர்தலை தவிர்க்கலாம், அதனால் ஏற்படும் பெரும் பொருட்செலவையும் மிச்சப்படுத்தலாம்.
எனவே பேசாமல் அனைவரும் சேர்ந்து பிரதீபா பாட்டீலையே ஒரு மனதாக மீண்டும் குடியரசுத் தலைவராக்கி விடுவதே நல்லது என்று இவர்கள் சொல்கிறார்கள்.
(வேட்பாளர் இவர்தான், இவருக்குத்தான் எங்கள் ஆதரவு என்று அனைவரும் சொல்லும் வரை இப்படி நாமும் ஏதாவது பேசிக் கொண்டிருக்க வேண்டியது தான்....!)