பாலிடெக்னிக்கில் பிளஸ் 2 மாணவர்கள் 2-ம் ஆண்டில் நேரடியாக சேர புதிய நடைமுறை
டெல்லி: பாலிடெக்னிக்குகளில் பிளஸ் 2 முடித்த மாணவர்கள் நேரடியாக 2-வது ஆண்டில் சேரும் நடைமுறையில் அகில இந்திய தொழில்நுட்ப கல்விக் குழு மாற்றம் செய்துள்ளது.
பாலிடெக்னிக்கில் டிப்ளமோ படிக்க சேர்வதற்கு எஸ்.எஸ்.எல்.சி. படித்திருந்தால் போதும். அவர்கள் 3 ஆண்டு படிக்க வேண்டும். பிளஸ்-2 முடித்த மாணவர்கள பாலிடெக்னிக் படிக்கும்போது அவர்கள் முதலாம் ஆண்டு படிக்காமல் நேரடியாக 2-வது ஆண்டில் சேரலாம். இதுவே தற்போதுள்ள நடைமுறை.
இப்போது பிளஸ்-2 படிக்கும் போது "தொழில்கல்வி" படித்தவர்கள் மட்டும்தான் பாலிடெக்னிக் கல்லூரியில் 2-வது ஆண்டில் நேரடியாக சேரமுடியும் என்றும், வேறு குரூப் எடுத்தவர்கள் சேரமுடியாது என்றும் அகில இந்திய தொழில்நுட்ப கல்விக்குழு (ஏ.ஐ.சி.டி.இ.) புதிய விதிமுறைகளை கொண்டுவந்துள்ளது.
இந்த புதிய நடைமுறையை ரத்து செய்ய வேண்டும் என்று மறுமலர்ச்சி திமுக பொதுச்செயலாளர் வைகோ வலியுறுத்தியுள்ளார்.