நிபந்தனைப்படி மேட்டுப்பாளையத்தில் கையெழுத்துப் போடாத ராவணன் - விளக்கம் கேட்டு கோர்ட் நோட்டீஸ்
சென்னை: ஒரு கோடி ரூபாய் மோசடி வழக்கில் கைது செய்யப்பட்ட சசிகலாவின் உறவினர் ராணவன் ஜாமீன் உத்தரவைப் பின்பற்றாதது குறித்து நீதிமன்றம் விளக்கம் கேட்டுள்ளது.
திருப்பூரைச் சேர்ந்த இரும்பு வியாபாரி கிருஷ்ணமூர்த்தி என்பவரிடம் மணல் குவாரி லைசென்ஸ் பெற்றுத் தருவதாகக் கூறி ஒரு கோடி ரூபாய் மோசடி செய்ததாக சசிகலாவின் உறவினர் ராவணன் போலீசாரால் கைது செய்யப்பட்டார். கைது செய்யப்பட்ட ராவணனை ஆலந்தூர் கோர்ட்டில் ஆஜர்படுத்திய போலீசார், பின்பு சிறையில் அடைத்தனர். இந்த வழக்கில் ராவணுக்கு நீதிமன்றம் நிபந்தனை ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது.
மேட்டுப்பாளையம் நீதிமன்றத்தில் தினமும் கையெழுத்துப் போட வேண்டும் என்பது நிபந்தனை. ஆனால் கடந்த சில நாட்களாக ராவணன் நிபந்தனைப்படி கையெழுத்துப் போடவில்லை என கூறப்படுகின்றது. இந்த தகவல் மேட்டுப்பாளையம் நீதிமன்றத்தில் இருந்து ஆலந்தூர் நீதி மன்றத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இது தொடர்பாக வரும் 18-ந் தேதி விளக்கம் அளிக்குமாறு ராவணனுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது.