ஸ்விஸ் வங்கிகளில் பணம் குவிப்பதில் 55வது இடத்தில் இந்தியா!
ஸ்விஸ் வங்கியில் இந்தியர்கள் போட்டு வைத்துள்ள கருப்புப் பணம் இந்தியாவில் பெரும் பரபரப்பையும், விவாதத்தையும் ஏற்படுத்தி வந்தாலும் கூட உலக அளவில் ஒப்பிடுகையில், நமது கருப்புப் பணத்தின் பங்கு வெறும் 0.14 சதவீதம்தானாம். உலக அளவில் அதிக அளவில் கருப்புப் பணத்தை ஸ்விஸ் வங்கிகளில் பதுக்கி வைப்பவர்கள் வரிசையில் இந்தியாவுக்கு 55வது இடமே கிடைத்துள்ளதாம்.
ஒட்டுமொத்தமாக ஸ்விஸ் வங்கிகளில் குவித்து வைக்கப்பட்டுள்ள ஒட்டுமொத்த பணத்தின் மதிப்பு ரூ. 90 டிரில்லியன் ஆகும். இதில் இந்தியர்களின் பங்கு ரூ. 12,700 கோடியாகும்.
ஸ்விஸ் வங்கிகளில் பெருமளவில் பணத்தைக் குவிப்பவர்கள் வரிசையில் முதலிடத்தில் இருப்பது இங்கிலாந்துதான். அவர்களின் பண மதிப்பு 20 சதவீதமாகும். 2வது இடத்தில் 18 சதவீதத்துடன் அமெரிக்கா உள்ளது.
அதற்கு அடுத்த வரிசையில், மேற்கு இந்தியத் தீவுகள், ஜெர்சி, ஜெர்மனி, பஹாமஸ், லக்சம்பர்க், பனாமா, பிரான்ஸ், ஹாங்காங், கேமன் தீவுகள், ஜப்பான், சிங்கப்பூர், ஆஸ்திரேலியா, இத்தாலி, நெதர்லாந்து, ரஷ்யா, சவூதி அரேபியா ஆகியவை வருகின்றன.
இந்தியர்களின் இந்த ரூ. 12,700 கோடி பணம் என்பது சம்பந்தப்பட்டவர்களின் நேரடிப் பெயர்களில் இடம் பெற்றுள்ள பணம் மட்டுமே. பினாமி பெயரில் போடபப்ட்டுள்ள பணம் குறித்த தகவல் இல்லை. ஒரு வேளை அது இந்த தொகையை விட பல மடங்கு அதிகமாக இருக்கலாம் என்பது குறிப்பிடத்தக்கது.