2014-ல் ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டிதான்: ஜெகனின் மனைவி ஆரூடம்
இது தொடர்பாக ஆங்கில நாளேடு ஒன்றுக்கு அவர் அளித்த பேட்டியில் கூறியுள்ளதாவது:
ஜெகனுக்கு எதிராக சிபிஐயால் எந்த ஆதாரத்தையும் கடந்த 10 மாத காலமாக திரட்ட முடியவில்லை. சாக்ஷி நாளேடானது நாட்டின் 8-வது இடத்தில் இருக்கிறது. இதற்குக் காரணம் அதன் நேர்த்திதான். இந்த நாளேட்டுக்கான வருமானம் நேர்மையான முறையில்தான் திரட்டப்பட்டது. ஈநாடு நாளேடும்கூட இந்த அளவுக்கு வருமானத்தை சம்பாதித்திருக்கிறது.
சிபிஐக்கு ஜெகன் ஒத்துழைப்பு தரவில்லை என்று கூறப்படுகிறது. ஆனால் இது தொடர்பாக நீதிமன்றத்தில் ஜெகன் மீது சிபிஐ குற்றம்சாட்டியபோதே, தம்மிடம் நடத்தபப்ட்ட விசாரணை வீடியோ காட்சிகளைப் பார்த்து முடிவு செய்யுமாறு நீதிபதியிடம் ஜெகன் கோரியிருந்ததை நினைவு கொள்ள வேண்டும்.
ஜெகனை ஜாமீனில் எடுப்பதற்கான நடவடிக்கை மேற்கொள்ள உள்ளோம். ஜெகனின் தாயார் விஜயம்மா அடுத்த வாரம் டெல்லி சென்று பிரதமர் மன்மோகன்சிங்கை சந்தித்து ஜெகன் விவகாரம் குறித்து பேச இருக்கிறார்.
ஜெகனைப் பொறுத்தவரையில் அவரது தந்தையைப் போன்றவர். ராஜசேகர ரெட்டி மக்களுக்காக போராடியவர். ஜெகனும் அப்படித்தான். வரும் 2014-ம் ஆண்டு ஆந்திர பிரதேசத்தின் முதலமைச்சராக ஜெகன்மோகன் ரெட்டி பதவியில் அமருவார். மிகச் சிறந்த ஒரு முதலமைச்சராக ஜெகன் ஆற்றப் போகும் பணிகளால் இந்தியாவுக்குப் பெருமை கிடைக்கும்.
ஜெகனுக்கு காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் பலரும் தொடர்ந்து ஆதரவு தெரிவித்து வருகின்றனர். ஆனால் ஜெகன் பழிவாங்கும் அரசியல்வாதி அல்ல என்பதால் ஆளும் காங்கிரசுக்கு எதிராக நம்பிக்கை இல்லா தீர்மானத்தைக் கொண்டுவரமாட்டார்.
ராஜசேகர ரெட்டி மறைவைத் தொடர்ந்து முதல்வராக வேண்டும் என்று ஜெகன்மோகன் ரெட்டி ஒருபோதும் ஆசைப்பட்டது கிடையாது. ராஜசேகர ரெட்டி மறைந்த அதிர்ச்சியில் இருந்து இந்த குடும்பம் மீளாத நிலையில் 20 நாட்களுக்குப் பிறகுதான் ஜெகனுக்கு ஆதரவாக கையெழுத்து இயக்கம் நடத்துவதே தெரியவந்தது. ராஜசேகர ரெட்டியின் மறைவால் 600 பேர் முதல் 700 பேர் அதிர்ச்சியில் இறந்து போயினர்.. தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டர். ராஜசேகர ரெட்டியின் மகன் என்ற முறையில் இந்த குடும்பங்கலுக்கு ஆறுதல் தெரிவிக்க வேண்டியது ஜெகனின் கடமை. ஆனால் இதுபற்றி விளக்கம் அளிக்க சோனியா ஒருபோதும் நேரம் கொடுக்கவில்லை. 6 மாதம் ஜெகனும் காத்திருந்து பார்த்துவிட்டுத்தான் ஆறுதல் யாத்திரையை மேற்கொண்டார். இதுதான் நடந்த உண்மை என்றார் அவர்.