ஜெகன் சொத்துக் குவிப்பு வழக்கு: இந்தியா சிமெண்ட்ஸ் தலைவர் சீனாவசனிடம் சிபிஐ கிடுக்குப் பிடி விசாரணை
ஆந்திர மாநில முதல்வராக ராஜசேகர ரெட்டி இருந்தபோது அமைச்சர்கள் உதவியுடன் வருமானத்துக்கு அதிகமாக ஜெகன் மோகன் ரெட்டி சொத்து சேர்த்தார் என்பது சி.பி.ஐ. புகார். இந்த வழக்கில் ஜெகன் கைது செய்யப்பட்டு தற்போது சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில் ராஜசேகர ரெட்டி ஆட்சிக் காலத்தில் சிமெண்ட் தயாரிப்புக்காக ஆற்று நீரை முறைகேடாக பயன்படுத்திக் கொள்ள சிமெண்ட் நிறுவனங்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டிருந்ததாகவும் இந்த நிறுவனங்கள் இதற்குப் பிரதிபலனாக ஜெகன் மோகனின் நிறுவனங்களில் பலநூறு கோடியை முதலீடு செய்திருப்பதாகவும் சிபிஐ குற்றம்சாட்டி இருந்தது. இது தொடர்பாக விசாரணைக்கு வருமாறு இந்தியா சிமெண்ட்ஸ் நிறுவனத்தின் தலைவரும் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் தலைவருமான சீனிவாசனுக்கும் சம்மன் அனுப்பியிருந்தது சிபிஐ.
இதைத் தொடர்ந்து ஹைதராபாத்தில் சிபிஐ முன்பு இன்று காலை ஆஜரான சீனிவாசனிடம் சிபிஐ கிடுக்குப்பிடி விசாரணையை மேற்கொண்டு வருகிறது.