முன்னாள் அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம் மீது பாய்ந்தது குண்டர் சட்டம்!
சேலம் அங்கம்மாள் காலனி விவகாரத்தில் சிறையில் வீரபாண்டி ஆற்முகம் அடைக்கப்பட்டுள்ள நிலையில் குண்டர் சட்டத்தின் கீழ் அவர் மீண்டும் கைது செய்யப்பட்டிருக்கிறார். இதற்கு முன்னர் வீரபாண்டி ஆறுமுகத்தின் தம்பி மகன் பாரப்பட்டி சுரேஷ்குமார் மீது குண்டர் சட்டம் பாய்ந்திருந்தது. இதேபோல் வீரபாண்டி ஆறுமுகத்தின் உதவியாளர் கவுசிக பூபதி மீதும் குண்டர் சட்டம் பாய்ந்திருந்தது.
திமுகவின் மூத்த தலைவர்களில் ஒருவரான வீரபாண்டி ஆறுமுகம் மீது குண்டர் சட்டம் பாய்ந்திருப்பது அந்த கட்சியினரை கடும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
முன்னாள் அமைச்சர்கள் மீது அடுத்தடுத்து வழக்குகள் பாய்வது தொடர்பாக செயற்குழுவைக் கூட்டி விவாதிப்போம் என்று இன்றுதான் திமுக தலைவர் கருணாநிதி கூறியிருந்தார். இந்த நிலையில் மூத்த தலைவர்களில் ஒருவரான வீரபாண்டியார் மீது குண்டர் சட்டம் பிரயோகிக்கப்பட்டிருப்பது திமுகவுக்கு அதிமுக அரசு விடுத்துள்ள சவாலாக கருதப்படுகிறது.