கர்நாடக முதல்வர் சதானந்தாவுக்கு நெருக்கடி- எம்.எல்.ஏக்கள் கூட்டத்தை கூட்ட 3 நாள் கெடு
பெங்களூர்: கர்நாடகத்தில் முதல்வர் சதானந்தா கவுடாவுக்கு மீண்டும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது. எம்.எல்.ஏக்கள் கூட்டத்தை கூட்ட 3 நாள் கெடு விதித்துள்ளனர் மூத்த அமைச்சர்கள்.
கர்நாடக மாநில முதல்வராக இருந்த எதியூரப்பா சுரங்க முறைகேட்டில் சிக்கி சிறைக்குப் போய் மீண்டு வந்து கலகக் குரல் எழுப்பி வந்தார். அவரது கலகக் குரலுக்கு எந்த ஒரு பலனு ஏற்படவில்லை. அமைதியாகவிட்ட எதியூரப்பா கட்சி மாறுவதா? புது கட்சி தொடங்குவதா? என்ற தீவிர யோசனையில் இருந்து வருகிறார்.
இந்த நிலையில் சதானந்தா கவுடாவுக்கு எதிராக மூத்த அமைச்சர்கள் பலரும் போர்க்கொடி தூக்கி வருகின்றனர். தம்மை முதல்வராக்கக் கோரினால்தானே பிரச்சனை.. தமது ஆதரவாளரான ஜெகதீஷ் ஷெட்டரை முதல்வராக்கினால் பிரச்சனை இல்லை என்று கருதிய எதியூரப்பா மீண்டும் கலகத்தில் ஈடுபடத் தொடங்கிவிட்டார். தமது ஆதரவாளர்கள் மூலம் 3 நாட்களுக்குள் எம்.எல்.ஏக்கள் கூட்டத்தைக் கூட்டியாக வேண்டும் என்று மாநில பாஜக தலைமைக்குக் கெடு வைத்துள்ளனர்.
இந்தக் கெடுவால் மகிழ்ச்சியடைந்துள்ள எதியூரப்பா, பெரும்பான்மை எம்.எல்.ஏக்கள் யாரை முதல்வராக தேர்ந்தெடுத்தாலும் தமக்கு மகிழ்ச்சிதான் என்று கூறியுள்ளார்.
அதாவது எம்.எல்.ஏக்கள் கூட்டம் கூட்டப்பட்டால் வரும் 21- ந்தேதியன்று கர்நாடக அரசியலில் புதிய திருப்பம் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உண்டு என்கின்றனர் அரசியல் பார்வையாளர்கள்.