ஜெயந்திரர் சொல்லித்தான் நித்தியானந்தாவை தூக்கி உள்ளே போட்டாரா கெளடா?
சமீப காலமாக நித்தியானந்தா படு சுதந்திரமாகவே எல்லா இடங்களுக்கும் போய் வந்து கொண்டிருந்தார். அதிலும், மதுரை ஆதீனத்தின் வாரிசாக அவரை மதுரை ஆதீனம் அறிவித்தற்குப் பிறகு அவருக்கு பல எதிர்ப்புகள் வந்தாலும் கூட அவர் தங்கு தடையின்றி சுதந்திரமாகவே நடமாடிக் கொண்டிருந்தார். படு துணிச்சலாகவும் பேட்டி கொடுத்து வந்தார். அவருக்கு எதிரான போராட்டங்களும் கூட அவரை எந்த வகையிலும் பாதிக்கவில்லை.
இன்னும் சொல்லப் போனால், மதுரை ஆதீன மடமே நித்தியானந்தாவின் ஆதரவாளர்கள் கையில்தான் முழுமையாக இருந்தது. அங்கு போராட்டத்துக்காகப் போனவர்களுக்குத்தான் அடி விழுந்ததே தவிர நித்தியானந்தா ஆதரவாளர்களை யாரும் ஒன்றும் செய்ய முடியவில்லை.
ஆனால் தற்போது நித்தியானந்தாவின் நிலைமை மிகவும் சிக்கலாகியுள்ளது. அவரால் முன்பு போல பிடதி ஆசிரமத்தில் இருந்து பணியாற்ற முடியுமா என்பது கேள்விக்குறியாகியுள்ளது. இனிமேல் கர்நாடகத்திலிருந்து அவர் 'இறைப் பணியாற்ற' முடியுமா என்பதும் சந்தேகமாகியுள்ளது.
இப்படி நிலைமை மாறிப் போனதற்குக் காரணம் அவர் மீது கர்நாடக அரசு எடுத்துள்ள அதிரடி நடவடிக்கைகளே. ஒரே நாளில் நித்தியானந்தாவின் கர்நாடக செயல்பாடுகள் முடங்கிப் போய் விட்டன. பிடதி ஆசிரமம் மூடப்பட்டு விட்டது, சீல் வைத்து விட்டனர்.
இனிமேல் நம்மால் பிடதியிலிருந்தோ அல்லது கர்நாடகத்திலிருந்தோ செயல்பட முடியாது, மதுரையில்தான் இனிமேல் நமது செயல்பாட்டு மையம் இருக்கும் என்று நித்தியானந்தாவே தனது ஆதரவாளர்களிடம் கூறியதாக ஒரு தகவல் கூறுகிறது.
நித்தியானந்தாவுக்கு இப்படி ஒரு நிலைமை ஏற்பட ஜெயேந்திரர்தான் காரணம் என்று நித்தியானந்தா ஆதரவு வட்டாரம் கூறுகிறதாம். ஜெயேந்திரர் சொல்லித்தான் சதானந்த கெளடா நித்தியானந்தாவைக் கைது செய்ய உத்தரவிட்டார், ஆசிரமத்தை முடக்கினார்,அடாவடியாக நடந்து கொண்டார் என்று இவர்கள் குற்றம் சாட்டுகிறார்கள்.
ஜெயேந்திரரின் தீவிர பக்தராம் கெளடா. எனவேதான் நித்தியானந்தா தரப்பு தன் மீது வழக்கு, குற்றச்சாட்டு என்று பாய்ந்ததால் கடுப்பில் இருந்து வந்த ஜெயேந்திரர் சொல்லி, கெளடா இப்படி ஒரு நடவடிக்கையை எடுத்து விட்டார் என்று அவர்கள் சொல்கிறார்கள்.
ஆனால் விரைவில் இதற்குரிய பலனை அவர்கள் அனுபவிப்பார்கள் என்றும் நித்தியானந்தா ஆதரவாளர்கள் கருவியபடி கூறுகிறார்கள்.
ஜெயேந்திரர் - நித்தியானந்தா மோதலுக்கு என்ன காரணம்?
மதுரை ஆதீன மடத்தின் வாரிசாக நித்தியானந்தாவை, மதுரை ஆதீனகர்த்தர் அருணகிரிநாதர் அறிவித்தார். இது பெருத்த சர்ச்சைகளை ஏற்படுத்தியது. அப்போது செய்தியாளர்களிடம் பேசிய நித்தியானந்தா, தனக்கு ஜெயேந்திரர் உள்ளிட்டோரின் ஆதரவு உள்ளது என்று கூறியிருந்தார். ஆனால் இதை உடனடியாக காஞ்சி சங்கர மடம் மறுப்பு தெரிவித்து விட்டது.
சில நாட்கள் கழித்து நித்தியானந்தா கூறியது குறித்து ஜெயேந்திரரிடம் செய்தியாளர்கள் கருத்து கேட்டபோது, நான் அப்படியெல்லாம் ஆதரவு தருவதாக சொல்லவில்லை. அவருடன் எப்போது பார்த்தாலும் ஒரு பெண் இருக்கிறார். அவரைப் போய் எப்படி நான் ஆதரிப்பது. மதுரை ஆதீன மடத்திற்கென்று பாரம்பரியம் உள்ளது என்று கூறியிருந்தார்.
இதையடுத்து ஜெயேந்திரர் மீது நடிகை ரஞ்சிதாவின் சகோதரி கோர்ட்டில் அவதூறு வழக்கு போட்டு விட்டார். ஜெயேந்திரரின் பேச்சால் தனது சகோதரி பெரும் மன உளைச்சலில் இருப்பதாகவும், குடும்பமே பெரும் உளைச்சலுக்குள்ளாகியுள்ளதாகவும் அவர் அந்த வழக்கில் கூறியுள்ளார்.
இதுதான் ஜெயேந்திரர் தரப்புக்கும், நித்தியானந்தா தரப்புக்கும் இடையே மோதல் ஏற்பட்டதன் பின்னணியாகும்.