ராணுவத்துக்கு தளவாடங்கள் வாங்க ரூ20 ஆயிரம் கோடி - மத்திய அரசு ஒப்புதல்
டெல்லி: ராணுவத்துக்கு ஏவுகணைகள் உள்ளிட்ட தளவாடங்களை வாங்க ரூ.20 ஆயிரம் கோடி ஒதுக்கீடு செய்து மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.
பாதுகாப்புத்துறையின் கொள்முதல் கவுன்சில் கூட்டம் தில்லியில் நடைபெற்றது. கூட்டத்துக்கு, மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ஏ.கே.அந்தோனி தலைமை வகித்தார்.
கூட்டத்தில், ராணுவத்தின் 8 படைப் பிரிவுகளுக்காக தரையிலிருந்து வான் இலக்குகளை விரைவாகத் தாக்கும் ஏவுகணைகளை வாங்க ரூ.20 ஆயிரம் கோடி ஒதுக்கீடு செய்ய ஒப்புதல் அளிக்கப்பட்டது. விமானப் படைக்கு சிறிய ரக போர் விமானங்களை வாங்குவதற்கும், நாடு முழுவதும் ராணுவத் தகவல் தொடர்பை மேம்படுத்தவும், கடற்படைக்கு நவீன துப்பாக்கிகள் வாங்குவதற்கும் ரூ.8,500 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. விமானப் படையின் தகவல் தொடர்புத் திட்டம் ரூ.7 ஆயிரம் கோடியில் செயல்படுத்தப்படும்.
தற்போது பயன்படுத்தப்படும் ரஷிய தயாரிப்பான "குவாட்ராட்' ஏவுகணைகளுக்குப் பதிலாக புதிய ஏவுகணைகளை வாங்க திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக உலகளாவிய டெண்டர் கோரப்படும். அமெரிக்காவின் "ரேய்தியான்', இஸ்ரேலின் "ரஃபேல்', பிரான்ஸின் "எம்.பி.டி.ஏ' ஆகிய நிறுவனங்கள் நவீன ரக ஏவுகணைகளைத் தயாரித்து வருவது குறிப்பிடத்தக்கது.
முன்னதாக கடந்த மாதம் ஓய்வுபெற்ற ராணுவத் தலைமைத் தளபதி வி.கே.சிங், பிரதமருக்கு எழுதிய கடிதத்தில், ராணுவத்தில் ஆயுதங்கள் போதுமான அளவில் கொள்முதல் செய்யப்படவில்லை என புகார் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.