பாகிஸ்தானின் புதிய பிரதமரானார் பர்வேஸ் அஷ்ரப்
இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் புதிய பிரதமராக ராஜா பர்வேஸ் அஷ்ரப் தேர்வு செய்யப்பட்டுள்ளார். அவருக்கு ஆதரவாக 211 வாக்குகள் கிடைத்தன.
பாகிஸ்தான் அதிபர் ஆசிப் அலி சர்தாரி மீதான ஊழல் வழக்கில் நடவடிக்கை எடுக்காத காரணத்தால், கோர்ட் அவமதிப்பு வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு, பிரதமராக இருந்த யூசுப் ரசா கிலானி தகுதி நீக்கம் செய்யப்பட்டு, பதவி இழந்தார். இதையடுத்து, பாகிஸ்தான் மக்கள் கட்சியின் உயர்மட்டக் கூட்டம் உடனடியாகக் கூட்டப்பட்டு ஜவுளித்துறை அமைச்சர் மக்தூம் சகாபுதீனை, புதிய பிரதமராக்கத் தீர்மானிக்கப்பட்டது. இந்த கட்சியின் துணைத் தலைவர் என்ற முறையில் பாகிஸ்தான் அதிபர் சர்தாரி, சகாபுதீனை பிரதமராக்க முன்மொழிந்தார். இவருக்கு மாற்றாக தகவல் தொழில் நுட்ப அமைச்சர் ராஜா பர்வேஸ் அஷ்ரப், பாகிஸ்தான் மக்கள் கட்சியின் தலைவர்களில் ஒருவரான கமர் சமான் கைரா ஆகியோரும் வேட்பு மனு தாக்கல் செய்திருந்தனர்.
இதைத் தொடர்ந்து பாகிஸ்தான் பார்லிமென்ட் சிறப்புக் கூட்டம் வெள்ளிக்கிழமை கூடியது. புதிய பிரதமர் தேர்வில் கூட்டணி கட்சியை சேர்ந்த மூன்று பேர் போட்டியிட்டனர். பாகிஸ்தான் மக்கள் கட்சி சார்பில் பர்வேஸ் அஷ்ரப்பும், பாகிஸ்தான் முஸ்லீம் லீக் (நவாஸ்) கட்சியின் சார்பில் சர்தார் மெஹ்தாப் அப்பாசி, ஜாமியாத் உலேமா -இ- இஸ்லாம் கட்சி சார்பில் மவுலானா பசலூர் ரஹ்மான் ஆகியோர் போட்டியிட்டனர். கடைசி நேரத்தில் நடந்த பேச்சு வார்த்தையில் பசலூர் ரஹ்மான் போட்டியிலிருந்து விலகினார். மெக்தாப் அப்பாசி போட்டியிலிருந்து விலக மறுத்து விட்டார்.
இதையடுத்து, 342 பேர் கொண்ட சபையில் ஓட்டெடுப்பு நடத்தப்பட்டது. 211 ஓட்டுகள் அஷ்ரப்புக்கு ஆதரவாகவும், 89 ஓட்டுகள் அப்பாசிக்கு ஆதரவாகவும் கிடைத்தன. அதிக ஓட்டுகள் பெற்ற அஷ்ரப் பாகிஸ்தானின், 25வது பிரதமராக அறிவிக்கப்பட்டார்.
முன்னதாக சகாபுதீன், சுகாதார அமைச்சராக இருந்தபோது, "எபிட்ரின்' என்ற போதை மருந்து நிர்ணயிக்கப்பட்ட அளவை தாண்டி, இரண்டு மருந்து நிறுவனங்களுக்காக அதிக அளவில் இறக்குமதி செய்யப்பட்டதில், 700 கோடி ரூபாய் அளவுக்கு ஊழல் நடந்துள்ளதாக, பாகிஸ்தான் போதைத் தடுப்பு வாரியம் கோர்ட்டில் வழக்குப் பதிவு செய்தது. இந்த ஊழலில், முன்னாள் பிரதமர் யூசுப் ரசா கிலானி மகன் அலி மூசாவும் சம்பந்தப்பட்டுள்ளார். எனவே, சகாபுதீனையும், அலி மூசாவையும் கைது செய்யும் படி, ராவல்பிண்டியில் உள்ள போதைத் தடுப்பு கோர்ட் புதன்கிழமை கைது வாரன்ட் பிறப்பித்தது. ஒரு வாரத்தில் இவர்களை கோர்ட்டில் ஆஜர்படுத்த உத்தரவிடப்பட்டது.
பிரதமராக நியமிக்கப்படுவதற்கு முன்னதாகவே, சகாபுதீனுக்கு கைது வாரன்ட் பிறப்பிக்கப்பட்டதால், அவர் பிரதமர் பதவிக்கான தேர்விலிருந்து விலக்கப்பட்டார். இதையடுத்து தகவல் தொழில்நுட்ப அமைச்சர் ராஜா பர்வேஸ் அஷ்ரப் பெயர் பிரதமர் பதவிக்காகப் பரிந்துரைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.