கல்வி உதவித் தொகை பெற காலக்கெடு நீட்டிப்பு: டி.என்.பி.எல். நிறுவனம் அறிவிப்பு
கரூர்: தொழிற்கல்வி பயில வழங்கப்படும் டி.என்.பி.எல். கல்வி உதவித் தொகை பெறுவதற்கான காலக்கெடு நீட்டிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து தமிழ்நாடு செய்தித்தாள் காகித நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது,
திருச்சி சேஷசாயி இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜியில் காகிதக் கூழ் பிரிவில் மூன்றரை ஆண்டுகள் தொழில் பட்டயப் படிப்பில் சேர்ந்து பயிலும் 5 மாணவர்களுக்கு கல்விக் கட்டணம் செலுத்த தமிழ்நாடு செய்தித்தாள் காகித நிறுவனம் முடிவு செய்துள்ளது.
இதை கரூர் மாவட்டத்தில் உள்ள புஞ்சை புகழூர், புஞ்சை தோட்டக்குறிச்சி, காகிதபுரம் ஆகிய பேரூராட்சிகள் நஞ்சை புகழூர், புன்னம், கோம்புப்பாளையம், திருக்காடுதுறை, வேட்டமங்கலம் ஆகிய ஊராட்சிகளில் நிரந்தரமாக வசிப்பவர்கள் பெறலாம். அதே போல, தொழில் கல்வியில் சேர விருப்பமுள்ளவர்கள் விண்ணப்பப் படிவங்களை டி.என்.பி.எல். துணைப் பொது மேலாளரிடம் (மனிதவளம்) பெற்று ஜூன் 20ம் தேதிக்குள் நிறைவு செய்து அளிக்க வேண்டும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில் மாணவ, மாணவிகளின் வசதிக்காக கடைசி தேதி ஜூன் 30ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.