மியாமி: 17 வார கருவின் வாயில் இருந்த புற்றுநோய்க் கட்டி அகற்றம்
மியாமியைச் சேர்ந்தவர் டாம்மி கோன்சாலஸ். அவர் கர்ப்பமாக இருந்தபோது மயாமியில் உள்ள ஜாக்சன் மெமோரியல் மருத்துவமனைக்கு பரிசோதனைக்கு சென்றார். அப்போது 17 வார கருவை ஸ்கேன் செய்த டாக்டர்கள் அதன் வாயில் டென்னிஸ் பந்து அளவுக்கு புற்றுநோய்க் கட்டி இருப்பதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். உடனே கருவைக் கலைக்க வேண்டும், அல்லது வயிற்றில் இருக்கும் கருவுக்கு ஆபரேஷன் செய்ய வேண்டும் என்று டாக்டர்கள் தெரிவித்தனர்.
கருவைக் கலைக்க மனமில்லாத டாம்மி ஆபரேஷனுக்கு சம்மதித்தார். இதையடுத்து லேசர் சிகிச்சை மூலம் கருவின் வாயில் இருந்த புற்றுநோய்க் கட்டி அகற்றப்பட்டது. அதன் பிறகு 5 மாதம் கழித்து அழகிய பெண் குழந்தை லேனா வாயில் வடுவுடன் பிறந்தது. தற்போது 20 மாத குழந்தையாக இருக்கும் லேனாவின் வாயில் அந்த வடு தெரியவில்லை.
மேலும் தனது மகள் ஆரோக்கியமாக இருப்பதாக டாம்மி தெரிவித்துள்ளார். 2010ம் ஆண்டு மே மாதம் ஜாக்சன் மெமோரியல் மருத்துவமனையில் இந்த ஆபரேஷன் நடந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
கருவில் உள்ள குழந்தைக்கு ஆபரேஷன் செய்து புற்றுநோய்க் கட்டி அகற்றி இருப்பது இதுவே முதல் முறையாகும்.