26/11 தாக்குதலுக்கு பாகிஸ்தானில் இருந்து ஆள் அனுப்பியவன் டெல்லி ஏர்போர்ட்டில் கைது
26/11 மும்பை தாக்குதல்களை நடத்த சதிசெய்த 6 தீவிரவாதிகளில் ஒருவன் செய்யது ஜபியுத்தீன் (எ) அபு ஹம்சா. அவனுக்கு இந்தியன் முஜாஹிதீன் மற்றும் லஷ்கர் இ தொய்பா ஆகிய தீவிரவாத அமைப்புகளுடன் தொடர்பு உள்ளது. அவன் மும்பையில் தாக்குதல் நடத்த பாகிஸ்தான் சென்று ஆட்களை தேர்வு செய்து அனுப்பியுள்ளான். மேலும் எங்கெல்லாம் தாக்குதல் நடத்தலாம் என்று இடங்களையும் அடையாளம் காட்டியுள்ளான். தீவிரவாத தொடர்புக்காக சவூதி அரேபியாவில் இருந்து நாடு கடத்தப்பட்டவன். இந்நிலையில் அவன் இந்தியா வருவதாக டெல்லி போலீசாருக்கு உளவுத் துறை ரகசிய தகவல் கொடுத்தது.
இதையடுத்து இன்று காலை டெல்லியில் உள்ள இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையித்தில் வைத்து ஜபியத்தீன் கைது செய்யப்பட்டான். அவன் கடந்த 2006ம் ஆண்டில் இருந்தே ஒரு இடத்தில் இருந்து இன்னொரு இடத்திற்கு ஓடிக் கொண்டே இருந்துள்ளான் என்று கூறப்படுகிறது. அவன் மும்பை தாக்குதல்கள் தவிர பல்வேறு தீவிரவாத தாக்குதல்கள் நடத்த உரிய இடத்தை அடையாளம் காட்டியுள்ளான் என்றும் கூறப்படுகிறது.