மத்திய அமைச்சர் வீர்பத்ரசிங், மனைவி பிரதிபா மீது ஊழல் வழக்கில் குற்றச்சாட்டுகள் பதிவு
சிம்லா:மத்திய அமைச்சரும் இமாச்சலப் பிரதேச முன்னாள் முதல்வருமான வீர்பத்ரசிங் மற்றும் அவரது மனைவி பிரதிபா சிங்குக்கு எதிராக சிம்லா நீதிமன்றத்தில் லஞ்ச ஊழல் வழக்கில் குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்படன.
இமாச்சலப் பிரதேச முதல்வராக வீர்பத்ர சிங் இருந்தபோது அதிகாரத்தை தவறாகப் பயன்படுத்தினார் என்பது புகார். இது தொடர்பாக 2007-ம் ஆண்டு விஜய்சிங் மங்கோடியா ஆடியோ ஆதாரம் ஒன்றை வெளியிட்டிருந்தார்
அதில் 2003 முதல் 2007-ம் ஆண்டுகாலத்தில் முதலமைச்சராக இர்ந்த போது சிமெண்ட் துறையில் தொழிலதிபர்கள் முதலீடு செய்வதற்கு பிரதிபலனாக பெறப்பட்ட லஞ்சப் பணம் தொடர்பாக வீர்பத்ர சிங், அவரது மனைவி பிரதிபா சிங், மொகிந்தர் லால் மற்றும் அண்மையில் இறந்த ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி ஆகியோர் பேசுவது பதிவாகி இருந்தது.
இந்த சிடி-யின் அடிப்படையில் 2009-ம் ஆண்டு வழக்குப் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடத்தப்பட்டது. இந்த வழக்கில் இன்று வீர்பத்ர சிங் மற்றும் அவரது மனைவி மீது குற்றச்சாட்டுகள் நீதிமன்றத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளன.
1962-ம் ஆண்டு நாடாளுமன்ற உறுப்பினராகத் தேர்வான வீர்பத்ரசிங், முதலமைச்சர், மத்திய அமைச்சர் உள்ளிட்ட பல்வேறு பொறுப்புகளை வகித்தவர்.