போர்வெல்லில் விழுந்த சில மணிநேரத்திலேயே இறந்த மஹி: ஆனால் உயிருடன் மீட்க 4 நாள் போராட்டம்
ஹரியானா மாநிலம் குர்கான் அருகே உள்ள மானேசர் பகுதியில் இருக்கும் கோ என்ற கிராமத்தைச் சேர்ந்த சிறுமி மஹி கடந்த புதன்கிழமை தனது 4வது பிறந்தநாளைக் கொண்டாடினாள். அன்று இரவு 11 மணி அளவில் வீட்டுக்கு அருகே விளையாடிக் கொண்டிருந்தாள். அப்போது அங்கு நின்று கொண்டிருந்த ஆட்டோவில் ஏறி விளையாடியபோது எதிராபாராவிதமாக 70 அடி ஆழ்துளை கிணற்றில் விழுந்துவிட்டாள். குறுகிய அந்த குழிக்குள் விழுந்த சிறுமி சுமார் 15 நிமிடமாக அலறியுள்ளாள்.
தன்னைக் காப்பாற்றுமாறு சுமார் ஒன்றரை மணிநேரம் அழுதுள்ளாள். ஆனால் மீட்புக் குழு ஒன்றரை மணி நேரம் கழித்து 12.30 மணிக்கு தான் சம்பவ இடத்திற்கு வந்துள்ளனர். அப்போது மஹி யார் என்ன கூறினாலும் பதில் அளிக்காமல் அமைதியாகிவிட்டாள். மறுநாள் அதாவது வியாழக்கிழமை காலையில் தான் மீட்புப் பணிகள் முழுவீச்சில் துவங்கின.
ஆழ்துளை கிணற்றுக்கு அருகே சுரங்கம் அமைத்து சிறுமியை மீட்கும் பணியில் ராணுவத்தினர் ஈடுபடுத்தப்பட்டனர். இந்த பணி வியாழக்கிழமை காலையில் இருந்து ஞாயிற்றுக்கிழமை மதியம் வரை நடந்தது. ஒரு வகையாக நேற்று மதியம் 1.30 மணி அளவில் சிறுமி மீட்கப்ப்டடாள். அதன் பிறகு அவளை பரிசோதித்த மருத்துவர்கள் அவள் இறந்துவிட்டதாகத் தெரிவித்தனர்.
ஆனால் சிறுமி கிணற்றுக்குள் விழுந்த சில மணிநேரங்களிலேயே இறந்துவி்ட்டதாக தற்போது தகவல் கிடைத்துள்ளது. ஆனால் கடந்த 4 நாட்களாக மீடியாக்களில் மஹியின் மீட்பு பணி பற்றிய செய்தி தான் ஒளிபரப்பாகின. நாடே அவளுக்காக பிரார்த்தனை செய்தது. இதற்கிடையே மஹி கடந்த வியாழக்கிழமை கையை அசைத்தாக கிணற்றுக்குள் பொருத்தப்பட்ட கேமராவில் பதிவானது என்று சில காட்சிகள் டிவி சேனல்களில் காண்பிக்கப்பட்டன.
வியாழக்கிழமை அதிகாலையிலேயே இறந்த மஹி எப்படி கையை அசைத்திருப்பாள். அப்படி என்றால் டிவியில் வந்த காட்சி பொய்யானதா. அவள் உயிருடன் இருப்பது போன்று மாயை ஏற்படுத்த செய்ததா. கிணற்றுக்கு அருகே சுரங்கப் பாதை தோண்டிச் சென்ற ராணுவத்தினரே மூச்சு விட சிரமப்பட்டனர். அப்படி இருக்கையில் சிறுமியால் எப்படி அவ்வளவு நேரம் மூச்சு விட முடியும் என்று அங்கிருந்த மருத்துவக் குழுவுக்கு தெரியாதா.
இல்லை சிறுமி இறந்தது குறித்து சந்தேகம் வந்தும் அதை வெளியே சொல்லவில்லையா. மீட்புப் பணியில் திருப்தியில்லை, அவர்கள் தாமதப்படுகின்றனர். எனக்கு என் மகள் உயிரோடு வேண்டும் என்று மஹியின் தாய் சோனியா கண்ணீர் விட்டாரே. அப்படி என்றால் மீட்புப் பணியினரின் தாமதத்தினால் தான் சிறுமி இறந்தாளா?
நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?