ஊழல் வழக்கில் குற்றச்சாட்டுகள் பதிவு: மத்திய அமைசர் வீர்பத்ரசிங்ராஜினாமா
1989-ம் ஆண்டு முதலமைச்சராக இருந்த வீர்பத்ரசிங் ஊழல் முறைகேட்டில் ஈடுபட்டார் என்பது புகார். இது தொடர்பான வழக்கில் சிம்லா நீதிமன்றத்தில் அவர் மீது நேற்று குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டன.
இதைத் தொடர்ந்து இன்று பிற்பகல் பிரதமர் மன்மோகன்சிங்கை நேரில் சந்தித்து தமது ராஜினாமா கடிதத்தை நேரில் கொடுத்தார்.
வீர்பத்ர சிங், அவரது மனைவி உள்ளிட்டோர் லஞ்சமாக பெற்ற பணம் தொடர்பாக பேசும் சிடி ஒன்று 2007-ம் ஆண்டு வெளியானது. இதை ஆதாரமாக வைத்து லஞ்ச ஊழல் வழக்கு தொடரப்பட்டு குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
இது தொடர்பாக கருத்து தெரிவித்த வீர்பத்ர சிங், என்னுடைய நேர்மையை எவரும் சந்தேகிக்க முடியாது. எனக்குப் பின்னால் முதலமைச்சராக வந்த பிகே துமால் பொய்யான வழக்கை ஜோடித்தார். பொய்யான ஆதாரத்தின் அடிப்படையில் அந்த வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு சிம்லா அமர்வு நீதிமன்றத்தில் தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில் மீண்டும் இந்த வழக்கை தூசுதட்டி எடுத்துள்ளனர். நிச்சயம் நான் தொடர்ந்தும் போராடுவேன். இதற்கெல்லாம் பயப்படப் போவதில்லை என்றார் அவர்.