எம்.பி.பி.எஸ்-ல் சேர பொதுப்பிரிவினருக்கான கட் ஆஃப் மதிப்பெண் 198.50, பி.சி. 197.50
சென்னை: 2012-2013 கல்வியாண்டில் தமிழகத்தில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரிகளில் சேர பொதுப் பிரிவினருக்கான கட் ஆஃப் மதிப்பெண்198.50க இருக்கும் என்று கணக்கிடப்பட்டுள்ளது.
2012-2013 கல்வியாண்டில் தமிழகத்தில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரிகளில் சேர்வதற்கான கட் ஆஃப் மதிப்பெண் வெளியிடப்பட்டுள்ளது. பொதுப் பிரிவைச் சேர்ந்த மாணவ-மாணவியருக்கான கட் ஆஃப் மதிப்பெண் 198.50கவும், பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவர்களுக்கு 197.50கவும், பிற்படுத்தப்பட்ட (முஸ்லிம்) வகுப்பைச் சேர்ந்த மாணவர்களுக்கான மதிப்பெண் 196.25கவும், மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 196.25கவும், தாழ்த்தப்பட்ட வகுப்பினர் மற்றும் தாழ்த்தப்பட்ட அருந்ததியர் வகுப்பினருக்கு 192.50கவும், பழங்குடி வகுப்பினருக்கு 189.25கவும் மதிப்பிடப்பட்டுள்ளது.
மருத்துவப்படிப்பில் சேர 27,877 பேர் தகுதியுள்ளவர்களாக ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளனர். இதையடுத்து கட் ஆஃப் மதிப்பெண் அடிப்படையிலான ரேங்க் பட்டியல் சென்னை கீழ்ப்பாக்கம் மருத்துவக் கல்வி தேர்வுக் குழு அலுவலகத்தில் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் டாக்டர் விஜய் நேற்று வெளியிட்டார்.
எம்.பி.பி.எஸ். மற்றும் பி.டி.எஸ். படிப்புகளில் சேர 27,877 பேர் விண்ணப்பித்துள்ளனர். அதில் 18,061 பேர் மாணவிகள் மீதமுள்ள 9,816 பேர் மாணவர்கள். விண்ணப்பித்தவர்களில் 11,883 பேர் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் ஆவர். விண்ணப்பதாரர்களில் மாநில அரசின் கல்வித் திட்டத்தில் படித்தவர்களின் எண்ணிக்கை 25,329 மற்றும் சிபிஎஸ்இ மூலம் படித்தவர்களின் எண்ணிக்கை 557 ஆகும்.
கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு கட் ஆஃப் மதிப்பெண் 0.5 குறைந்துள்ளதால் கடந்த ஆண்டு பிளஸ் 2 முடித்தவர்கள் 1,895 பேர் எம்.பி.பி.எஸ். , பி.டி.எஸ். படிப்புகளில் சேர தற்போது விண்ணப்பித்துள்ளனர். குடும்பத்தில் முதல் பட்டதாரிகள் அடிப்படையில் அரசின் கல்வி கட்டணச் சலுகையைப் பெற 10,475 பேர் விண்ணப்பித்துள்ளனர்.