செப். 5க்குள் சர்தாரி அரசியலில் இருந்தே விலக வேண்டும், இல்லையென்றால்...: லாகூர் ஹைகோர்ட் உத்தரவு
பாகிஸ்தான் அதிபர் ஆசிப் அலி சர்தாரி மீது ஊழல் குற்றச்சாட்டுகள் எழுந்ததையடுத்து அவர் தனது பதவியை ராஜினாமா செய்துவிட்டு அரசியலில் இருந்தே விலக வேண்டும் என்று லாகூர் உயர் நீதிமன்றம் கடந்த 2011ம் ஆண்டு மே மாதம் 12ம் தேதி உத்தரவிட்டிருந்தது. ஆனால் சர்தாரி நீதிமன்ற உத்தரவை செயல்படுத்தவில்லை. இந்நிலையில் ஆளும் பாகிஸ்தான் மக்கள் கட்சியின் தலைவர் பதவியை சர்தாரி ராஜினாமா செய்யாதது குறித்து லாகூர் உயர் நீதிமன்றத்தில் 2 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.
இந்த மனுக்கள் லாகூர் உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி உமர் அடா பந்தியால் உள்பட 3 நீதிபதிகள் அடங்கிய பெஞ்ச் முன்பு விசாரணைக்கு வந்தது. மனுக்களை விசாரித்த அவர்கள் சர்தாரி வரும் செப்டம்பர் மாதம் 5ம் தேதிக்குள் தனது அதிபர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு, அரசியலில் இருந்தே விலக வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளனர். அவ்வாறு செய்யத் தவறினால் நீதிமன்ற அவமதிப்பு வழக்கை சந்திக்க நேரும் என்று அவர்கள் நேற்று எச்சரித்துள்ளனர்.
ஏற்கனவே சர்தாரி மீதான ஊழல் வழக்கு விசாரணையை முடுக்கிவிடாமல் இருந்ததால் தான் பாகிஸ்தான் பிரதமராக இருந்த கிலானி மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு பாய்ந்து அவர் பதவி பறிபோனது என்பது குறிப்பிடத்தக்கது.