என்னோட இந்தி டீச்சர் ஜிண்டால் கைதாகி விட்டாரா?.. கசாப் அதிர்ச்சி!
மும்பைக்குள் ஊடுறுவித் தாக்குதல் நடத்திய கசாப் உள்ளிட்ட 10 பாகிஸ்தான் தீவிரவாதிகளுக்கும் இந்தி கற்றுக் கொடுத்தவன் ஜிண்டால் என்பது நினைவிருக்கலாம். தற்போது ஜிண்டால் சிக்கியிருப்பது குறித்து கசாப் அதிர்ச்சியில் உள்ளானாம்.
இதுகுறித்து சிறை வார்டர்களிடம் அவன் பல கேள்விகளைக் கேட்டுள்ளான். எப்போது சிக்கினான் ஜிண்டால், அவன் மட்டும்தான் பிடிபட்டானா, அவனுடன் வேறு யாராவது அப்போது இருந்தார்களா என்பது குறித்து கேட்டுள்ளான் கசாப். தற்போது கசாப், மும்பை ஆர்தர் சாலை சிறைச்சாலையில் குண்டுதுளைக்காத அறையில் மிகுந்த பாதுகாப்புடன் அடைக்கப்பட்டுள்ளான் என்பது குறிப்பிடத்தக்கது.
கசாப்புக்கு செய்தித் தாள்கள் படிக்க அனுமதி இல்லை.இதனால் ஜிண்டால் பிடிபட்ட செய்தியை சிறை வார்டர்கள்தான் அவனுக்குத் தெரிவித்துள்ளனர். தன்னைப் போலவே ஜிண்டாலையும் இதே சிறையில் அடைப்பார்களா என்றும் கேட்டுள்ளான் கசாப்.
கசாப்புக்கு பாதுகாப்புக்காக நிறுத்தப்பட்டுள்ள பாதுகாப்பு அதிகாரிகள், பெரும்பாலும் கசாப்புடன் பேச மாட்டார்கள், அவன் ஏதாவது கேள்வி கேட்டாலும் பதிலளிக்க மாட்டார்கள். இருப்பினும் அவ்வப்போது பதிலளிப்பார்கள்.
சையத் ஜபியுதீன் அன்சாரி என்ற இயற் பெயர் கொண்ட ஜிண்டால் ஜூன் 21ம் தேதி சவூதி அரேபியாவிலிருந்து இந்தியாவுக்கு நாடு கடத்தப்பட்டான் என்பது நினைவிருக்கலாம்.