தமிழக சிறைகளில் கைதிகளுக்கு ஸ்மார்ட் கார்டுடன் கூடிய தொலைபேசி வசதி: சிறைத்துறை ஏடிஜிபி டோக்ரா தகவல்
கோயம்புத்தூர்: தமிழகத்தில் 58 சிறைகளில் கைதிகள் ஸ்மார்ட் கார்டு பயன்படுத்தக் கூடிய வகையிலான தொலைபேசி வசதி செய்யப்படும் என்று சிறைத்துறை ஏடிஜிபி டோக்ரா தெரிவித்துள்ளார்.
கோயம்புத்தூரில் இன்று செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:
தமிழக சிறைகளில் கடந்த ஓராண்டாக எந்த ஒரு அசம்பாவிதமும் நடைபெறவில்லை. சிறைக் கைதிகள் தயாரிக்கும் நோட்டு, சீருடைகல் ஆகியவற்றை சந்தைகளில் விற்பனை செய்ய முடிவு செய்துள்ளோம். சென்னை புழல் சிறையில் பேக்கரி அமைக்க ரூ47 லட்சம் ஒதுக்கப்பட்டுள்ளது. புழல் சிறையில் தயாரிக்கப்படும் பேக்கரி பொருட்கள் வெளிச்சந்தையிலும் விற்பனை செய்யப்படும்.
கோவை சிறையில் சில நாட்களுக்கு முன்பு செல்போன்கள் மற்றும் சிடிக்கள் கைப்பற்றது தொடர்பாக நடத்தப்பட்ட விசாரணையில் 3 போலீசாருக்கு தொடர்பிருப்பது தெரியவந்தது. இதில் தொடர்புடைய 3 கைதிகளும் சென்னை புழல் சிறைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.
இத்தகைய சம்பவங்கள் எதிர்காலத்தில் நடைபெறாமல் தடுக்க அரசு சார்பில் 58 சிறைகளில் தொலைபேசிகள் வைக்கப்பட உள்ளன. இதற்கான டெண்டர் எல்காட் நிறுவனத்துக்கு கொடுக்கப்பட்டுள்ளது. குறிப்பிட்ட தொலைபேசி எண்ணுக்கு குறிப்பிட்ட நேரம் மட்டும் பேசக் கூடிய வகையிலான ஸ்மார்ட் கார்டுகள் அடிப்படையில் இத்திட்டம் மேற்கொள்ளப்படும்.
மதுரையில் கைதிகளுக்கு குட்டை மரக் கன்றுகள் கொடுக்கப்பட்டு வளர்க்கப்பட்டு வருகின்றன. இதன் மூலம் அவர்களிடம் மனமாற்றத்தை ஏற்படுத்த முடியும் என கருதுகிறோம். நெட்டை மரக்கன்றுகள் கொடுத்தால் தற்கொலை மிரட்டல் விடுவார்கள் என்பதால் குட்டை மரக்கன்றுகள் கொடுக்கப்பட்டுள்ளன என்றார் அவர்.